கடைசி இரண்டு ஆட்டங்களில் ஏன் பந்து வீசவில்லை..? - பாண்ட்யா அளித்த பதில்


கடைசி இரண்டு ஆட்டங்களில் ஏன் பந்து வீசவில்லை..? - பாண்ட்யா அளித்த பதில்
x

Image Courtesy: Twitter

ஐ.பி.எல் தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் டெல்லி அணியை வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் அபார வெற்றி பெற்றது.

மும்பை,

ஐ.பி.எல் தொடரில் மும்பையில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியை வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் அணி அபார வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய மும்பை 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 234 ரன்கள் குவித்தது. மும்பை தரப்பில் அதிகபட்சமாக ரோகித் 49 ரன், டிம் டேவிட் 45 ரன் எடுத்தனர்.

இதையடுத்து 235 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய டெல்லி 20 ஓவர்களில் 8 விக்கெட்டை மட்டும் இழந்து 205 ரன் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் 29 ரன் வித்தியாசத்தில் மும்பை வெற்றி பெற்றது.

நடப்பு ஐ.பி.எல் தொடரில் மும்பை பெற்ற முதல் வெற்றி இதுவாகும். இந்நிலையில் இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்ற பின் மும்பை கேப்டன் பாண்ட்யா பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் நீங்கள் ஏன் கடைசி இரண்டு ஆட்டங்களில் பந்துவீசவில்லை என கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்தும், வெற்றி குறித்தும் பாண்ட்யா கூறியதாவது,

நாங்கள் இந்த சீசனில் எங்கள் அணியின் ஆடும் 12 வீரர்களை தேர்வு செய்ய சில வியூகங்களை செயல்படுத்தி வந்தோம். சரியான நேரத்தில் எங்கள் அணியை செட்டில் செய்வது மிகவும் அவசியமானதாக இருந்தது. அந்த வகையில் இதுவே எங்களது ஆடும் 12 வீரர்கள் அடங்கிய அணியாக இருக்கும் என நம்புகிறேன்.

மனதளவில் நாங்கள் தெளிவாக இருக்க வேண்டி இருந்தது. எங்களுக்குள் அன்பும், ஆதரவும் அதிகம் உள்ளது. எங்களுக்குள் நம்பிக்கை இருந்தது. தோல்வியில் இருந்து வெளிவர ஒரே ஒரு வெற்றி தேவை என அனைவரும் நம்பினோம். டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் சிறப்பான தொடக்கம் கிடைத்தது.

6 ஓவர்களில் 70க்கும் அதிகமான ரன்களை எடுத்தோம். வாய்ப்பு கிடைத்த போது அனைவரும் ரன் எடுத்தது வரவேற்கதக்கது. ஷெப்பர்ட் அதிரடியாக விளையாடினார். அவர் தான் எங்களுக்கு இந்த வெற்றியை பெற்றுக் கொடுத்தார். டெல்லிக்கும் எங்களுக்கும் இடையிலான ரன் வித்தியாசம் அவர் குவித்த அந்த ரன்கள் தான். நான் சரியான நேரத்தில் பந்து வீசுவேன். இன்றைய போட்டியில் அதற்கான தேவை வரவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.


Next Story