டெஸ்ட் போட்டிகளில் ஓப்பனிங் செய்வதை விரும்ப காரணம் என்ன? - சுமித் விளக்கம்


டெஸ்ட் போட்டிகளில் ஓப்பனிங் செய்வதை விரும்ப காரணம் என்ன? - சுமித் விளக்கம்
x

image courtesy; AFP

டெஸ்ட் போட்டிகளில் ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரராக ஸ்டீவ் சுமித்தை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்தது.

மெல்போர்ன்,

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆட உள்ளது. இதில் முதலாவதாக டெஸ்ட் தொடர் நடைபெற உள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி வரும் 17ம் தேதி தொடங்குகிறது.

இதனிடையே பாகிஸ்தான் அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியோடு ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர தொடக்க வீரர் டேவிட் வார்னர் ஓய்வு பெற்றார். இதன்பின் ஆஸ்திரேலியா அணியில் டேவிட் வார்னரின் இடத்தை நிரப்பப் போகும் பேட்ஸ்மேன் யார் என்ற கேள்வி எழுந்தது. ஆஸ்திரேலியா முன்னாள் வீரர்கள் பலரும் கேமரூன் க்ரீன், பேன்கிராப்ட் உள்ளிட்டோரை கூறி வந்தனர்.

ஆனால் யாரும் எதிர்பாராத விதமாக ஸ்டீவ் சுமித்தை தொடக்க வீரராக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அறிவித்தது. முன்னதாக வார்னர் ஓய்வு பெற்றவுடன் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்க சுமித் விருப்பம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் டெஸ்ட் போட்டிகளில் ஓப்பனிங் செய்ய விரும்பியதற்கான காரணத்தை சுமித் கூறியுள்ளார். அதில், ''மார்னஸ் லாபுசாக்னே 3-வது வரிசையில் களம் இறங்குவதால் நான் பேட்டிங் செய்ய நீண்ட நேரம் காத்திருக்க வேண்டி உள்ளது. பேட்டிங் செய்வதற்காக நீண்ட நேரம் காத்திருப்பதை நான் விரும்பவில்லை. தற்போது தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்குவதை நினைத்து மகிழ்ச்சியாக உள்ளது.

புதிய பந்தினை சந்திப்பது எனக்கு பிடிக்கும். 2019-ம் ஆண்டு ஆஷஸ் டெஸ்ட் தொடரின்போது நான் சீக்கிரமாக களம் இறங்கி புதிய பந்தினை சந்தித்தேன். 3-வது வரிசையில் களம் இறங்கி பல ஆண்டுகளாக புதிய பந்துகளில் சிறப்பாக விளையாடி உள்ளேன். இந்த தொடக்க ஆட்டக்காரர் பொறுப்பு ஒன்றும் புதிதாக இருக்கப் போவதில்லை. இந்த பொறுப்பை மகிழ்ச்சியுடனும், சவாலாகவும் ஏற்றுக்கொண்டு தொடக்க வரிசையில் விளையாடுவேன்''என்று கூறினார்.


Next Story