தோனி தவற விட்ட அந்த கேட்ச் குறித்து ஏன் யாரும் கோபப்படவில்லை? - முன்னாள் வீரர்கள் அதிருப்தி


தோனி தவற விட்ட அந்த கேட்ச் குறித்து ஏன் யாரும் கோபப்படவில்லை? -  முன்னாள் வீரர்கள் அதிருப்தி
x

image courtesy:PTI

தினத்தந்தி 11 April 2024 10:35 AM GMT (Updated: 11 April 2024 10:54 AM GMT)

ஐ.பி.எல். தொடரில் கொல்கத்தாவுக்கு எதிரான ஆட்டத்தில் ரசல் அடித்த பந்தை எம்.எஸ். தோனி கேட்ச் பிடிக்காமல் தவறவிட்டார்.

சென்னை,

ஐ.பி.எல் தொடரில் கடந்த 8-ம் தேதி சென்னையில் நடைபெற்ற ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 137 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இதையடுத்து 138 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய சென்னை அணி 17.4 ஓவரில் 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 141 ரன் எடுத்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

முன்னதாக அந்த போட்டியில் கொல்கத்தா பேட்டிங் செய்தபோது ரசல், சென்னை பவுலர் முஸ்தாபிசுர் வீசிய பந்தை பவுண்டரி அடிக்க முயற்சித்து கேட்ச் கொடுத்தார். இருப்பினும் தம்மை நோக்கி வந்த அந்த பந்தை தோனி கேட்ச் பிடிக்காமல் தவற விட்டார். ஆனால் அப்போது கேப்டன் ருதுராஜ் முதல் பந்து வீசிய ரகுமான் வரை யாருமே தோனி மீது அதிருப்தியை வெளிப்படுத்தவில்லை.

இந்நிலையில் தோனி தவற விட்ட அந்த கேட்ச் பற்றி ஏன் யாரும் கோபப்படவில்லை? என முன்னாள் வீரர்கள் மைக்கேல் வாகன் மற்றும் சைமன் டவுல் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர். இது குறித்து நேரலையில் அவர்கள் உரையாடியது பின்வருமாறு:-

வாகன்: ஒரு எளிதான கேட்ச்சை எம்.எஸ். தோனி தவற விட்டார். அப்போது கேமரா சி.எஸ்.கே. அணியின் வீரர்கள் மீது திருப்பப்பட்டது. ஏனெனில் கேட்ச்சை விட்டது தோனி என்பதால் அது பரவாயில்லை என்பதுபோல் அவர்கள் இருந்தனர்.

டவுல்: அதற்காக யாருமே ஒரு வார்த்தை கூட சொல்லவில்லை. அந்த சமயத்தில் தோனி கேட்ச் தவற விட்டதற்காக பவுலர் கோபமான ரியாக்சன் கொடுத்திருந்தால் அதை நான் விரும்பியிருப்பேன்.

வாகன்: அதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். ரகுமான் கோபமடைய சென்றார். இருப்பினும் தோனி என்பதால் கடைசியில் அவர் அமைதியாக சென்று விட்டார். இவ்வாறு அவர்கள் உரையாடினார்கள்.


Next Story