இங்கிலாந்து வீராங்கனையை 'மன்கட்' முறையில் ரன்-அவுட் செய்தது ஏன்? - தீப்தி ஷர்மா விளக்கம்


இங்கிலாந்து வீராங்கனையை மன்கட் முறையில் ரன்-அவுட் செய்தது ஏன்? - தீப்தி ஷர்மா விளக்கம்
x

இங்கிலாந்து வீராங்கனை சார்லி டீனை ‘மன்கட்’ முறையில் ரன்-அவுட் செய்தது ஏன்? என்று இந்திய சுழற்பந்து வீச்சாளர் தீப்தி ஷர்மா விளக்கம் அளித்தார்.

கொல்கத்தா,

லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் கடந்த சனிக்கிழமை நடந்த இங்கிலாந்துக்கு எதிரான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை 3-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றியது. கடைசி 40 பந்துகளில் வெற்றிக்கு 17 ரன்கள் தேவையாக இருந்த நிலையில் அணியை கரைசேர்க்க போராடிய இங்கிலாந்து வீராங்கனை சார்லி டீன் (47 ரன்கள்) ரன்-அவுட் செய்யப்பட்டார்.

அதாவது சுழற்பந்து வீச்சாளர் தீப்தி ஷர்மா பந்தை வீசுவதற்கு முன்பே பவுலிங் முனையில் நின்ற சார்லி டீன் கிரீசை விட்டு சில அடிகள் முன்னோக்கி நகர்ந்தார். இதனை கவனித்த தீப்தி ஷர்மா பந்தை வீசாமல் ஸ்டம்பை பந்தால் அடித்து சார்லி டீனை ரன்-அவுட் செய்து இந்திய அணிக்கு வெற்றியை தேடித்தந்தார்.

சர்ச்சைக்குரிய 'மன்கட்' முறையில் தீப்தி ஷர்மா ரன்-அவுட் செய்தது விமர்சனத்துக்கு உள்ளானது. இங்கிலாந்து வீரர்கள் பலர் இந்த ரன்-அவுட் விளையாட்டு உத்வேகத்துக்கு எதிரானது என்று கருத்து தெரிவித்தனர். அதேநேரத்தில் அஸ்வின் உள்ளிட்ட இந்திய வீரர்கள் தீப்தி ஷர்மா செய்தது விளையாட்டு விதிமுறைப்படி சரியானதாகும் என்று ஆதரவு தெரிவித்தனர்.

இந்த நிலையில் நேற்று கொல்கத்தா திரும்பிய இந்திய சுழற்பந்து வீச்சாளர் தீப்தி ஷர்மா இந்த விவகாரம் குறித்து விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறுகையில்,

'பந்து வீசும் முன்பு கிரீசை விட்டு முன்னோக்கி செல்ல வேண்டாம் என்று சார்லி டீனை பலமுறை எச்சரிக்கை செய்தோம். அத்துடன் நடுவரிடமும் புகார் தெரிவித்தோம். ஆனால் அவர் அதனை பொருட்படுத்தாமல் கிரீசை விட்டு வெளியே சென்ற வண்ணம் இருந்தார். இதனால் வேறுவழியின்றி எங்களது திட்டத்தின்படி அவரை ரன்-அவுட் செய்தேன். கிரிக்கெட் விதிமுறையின்படி தான் நாங்கள் செயல்பட்டோம்' என்றார்.


Next Story