உலகக்கோப்பை கிரிக்கெட்; அந்த 2 அணிகளை வீழ்த்துவது கடினம் - ஆஸ்திரேலிய வீரர் பேட்டி


உலகக்கோப்பை கிரிக்கெட்; அந்த 2 அணிகளை வீழ்த்துவது கடினம் - ஆஸ்திரேலிய வீரர் பேட்டி
x

image courtesy; ICC

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற உள்ள ஆட்டத்தில் ஆஸ்திரேலியா - ஆப்கானிஸ்தான் அணிகள் மோத உள்ளன.

மும்பை,

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற உள்ள மிக முக்கியமான ஆட்டத்தில் ஆஸ்திரேலியா - ஆப்கானிஸ்தான் அணிகள் மோத உள்ளன. இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற நிலையில் இரு அணிகளும் களம் இறங்குவதால் ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.

இந்நிலையில் இந்த உலகக்கோப்பை தொடரின் முதல் இரண்டு ஆட்டங்களில் தோல்வியை சந்தித்த ஆஸ்திரேலிய அணி கடைசி ஐந்து ஆட்டங்களில் வெற்றி பெற்றுள்ளதால் நிச்சயம் அரையிறுதிக்கான வாய்ப்பினை பெற முனைப்பு காட்டும் என ஆஸ்திரேலிய அணியின் முன்னணி வீரரான ஸ்டீவ் ஸ்மித் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது,

உலகக்கோப்பை தொடரின் முதல் நான்கு இடங்களுக்குள் வரவேண்டும் என்ற எண்ணத்தினை நாங்கள் கொண்டுள்ளோம். அனைத்து அணிகளுக்குமே அதே போன்ற எண்ணம் இருக்கும். நிச்சயம் நாங்கள் அரையிறுதிக்கு செல்ல வேண்டும் என்றே விரும்புகிறேன்.

ஆனால் அதற்கு கடுமையாக உழைக்க வேண்டும். நடப்பு உலகக்கோப்பை தொடரின் முதல் இரண்டு ஆட்டங்களில் நாங்கள் தோல்வியை சந்தித்திருந்தாலும் பின்னர் வெற்றி பாதைக்கு திரும்பியுள்ளோம். இன்றைய ஆட்டம் எங்களுக்கு மிகப்பெரிய ஆட்டமாக அமைய உள்ளது.

நாங்கள் இந்த ஆட்டத்தில் வெற்றி பெறும் பட்சத்தில் அரையிறுதிக்கு தகுதி பெறுவோம் என்று நினைக்கிறேன். முதல் இரண்டு இடங்களில் இருக்கும் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளை வீழ்த்துவது இந்த தொடரில் மிகவும் கடினம் என்றே நினைக்கிறேன். ஏனெனில் அவர்கள் அந்த அளவிற்கு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story