சொந்த மண்ணில் உலகக்கோப்பை.... ஆனால் இந்தியா தயாராக இல்லை - முன்னாள் பாக். வீரர்


சொந்த மண்ணில் உலகக்கோப்பை.... ஆனால் இந்தியா தயாராக இல்லை - முன்னாள் பாக். வீரர்
x

Image Courtesy: AFP

இந்தியாவில் இந்த வருட இறுதியில் ஒருநாள் (50 ஓவர்) உலகக்கோப்பை தொடர் நடைபெற உள்ளது.

கராச்சி,

இந்திய அணி சமீபத்தில் சொந்த மண்ணில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை 2-1 என இழந்தது. இதையடுத்து இந்திய வீரர்கள் ஐபிஎல் தொடருக்கு தீவிரமாக தயாராகி வருகின்றனர்.

இந்நிலையில், 50 ஓவர் உலகக்கோப்பை தொடர் இந்த ஆண்டு இறுதியில் இந்தியாவில் நடைபெற உள்ளது. இந்த தொடருக்காக அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன. சொந்த மண்ணில் நடைபெறும் உலகக்கோப்பையை இந்தியா கைப்பற்றி ரசிகர்களுக்கு விருந்து படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஐசிசி நடத்தும் ஒரு தொடரில் இந்திய அணி கடைசியாக கடந்த 2013ம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபியை தோனி தலைமையில் கைப்பற்றியது. அதன் பின்னர் நடைபெற்ற தொடர்களில் இந்தியா கோப்பையை வென்றதில்லை. அந்த நீண்ட கால சோகத்துக்கு முடிவு கட்டி இந்த கோப்பையை வெல்ல வேண்டும் என ரசிகர்கள் வேண்டுகின்றனர்.

இந்நிலையில், உலகக்கோப்பைக்கான இந்திய அணி இன்னும் தயாரகவில்லை என பாகிஸ்தான் முன்னாள் வீரர் டேனிஷ் கனேரியா கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறும்போது,

விராட் கோலி தனது பழைய பார்முக்கு திரும்ப நிறைய காலம் எடுத்தார். அவர் கோலி என்பதால் அணியில் எந்த மாற்றமும் இல்லை.

சூர்யகுமார் யாதவை ஏன் வீணடிக்க வேண்டும்? சஞ்சு சாம்சனை ஏன் வீணடிக்க வேண்டும்? ஷ்ரேயஸ் அய்யரின் உடற்தகுதி கவலை அளிக்கிறது. அவர் உலகக்கோப்பை தொடருக்கு முன் உடற்தகுதியை எட்டுவாரா? இல்லையா?. இந்தியா என்ன செய்ய போகிறது?

இந்திய அணி சொந்த மண்ணில் உலகக்கோப்பை தொடரில் ஆட உள்ளது. ஆனால், அவர்கள் இன்னும் அவர்கள் தயாரா இல்லை. இந்தியா மோசமாக கிரிக்கெட்டை ஆடுகிறது.

ஆஸ்திரேலிய அணி சிறந்த அணியை போல் விளையாடியது. ஸ்டீவ் ஸ்மித் தனது கேப்டன்ஷிப் திறமைக்காக நிறைய பாராட்டுக்கு தகுதியானவர். அவர் கேப்டன் பதவிக்காக உருவாக்கப்பட்டவர். ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரை இழந்தது. ஆனால், அவர்கள் போராடிய விதம் மிகவும் பாராட்டுக்குரியது. அவர்கள் இந்தியாவின் மீது ஆதிக்கம் செலுத்தினர்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.



Related Tags :
Next Story