உலகக் கோப்பையை வெல்லும் அணிக்கு பரிசுத்தொகை இத்தனை கோடியா...? ஐசிசி வெளியிட்ட அறிவிப்பு


உலகக் கோப்பையை வெல்லும் அணிக்கு பரிசுத்தொகை இத்தனை கோடியா...? ஐசிசி வெளியிட்ட அறிவிப்பு
x

இந்திய அணி நாளை நடைபெறும் அரையிறுதி ஆட்டத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறும் முனைப்பில் உள்ளது

மும்பை,

இந்தியாவில் நடைபெற்று வரும் 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டது. இந்த தொடரில் லீக் சுற்று ஆட்டங்கள் முடிவில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளன.நாளை மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் முதலாவது அரையிறுதி ஆட்டத்தில் புள்ளிப்பட்டியலில் முதல் இடம் பிடித்த இந்திய அணியும், 4வது இடம் பிடித்த நியூசிலாந்து அணியும் மோத உள்ளன.

லீக் சுற்றில் தோல்வியே சந்திக்காத இந்திய அணி நாளை நடைபெறும் அரையிறுதி ஆட்டத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறும் முனைப்பில் உள்ளது. அதேபோல் லீக் சுற்றில் இந்தியாவிடம் தோல்வி கண்ட நியூசிலாந்து அணி இந்திய அணியை வீழ்த்தி தொடர்ந்து 3வது முறையாக உலகக்கோப்பை இறுதிப்போட்டிக்கு முன்னேறும் முனைப்பில் உள்ளது. கடந்த 2019ம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை அரையிறுதி ஆட்டத்தில் நியூசிலாந்திடம் தோல்வி கண்டு வெளியேறிய இந்திய அணி இந்த முறை அதற்கு பழிதீர்க்கும் முனைப்புடன் உள்ளது. இதனால் நாளை நடைபெறும் ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.

கொல்கத்தாவில் நாளை மறுநாள் நடைபெறும் இரண்டாவது அரையிறுதியில் ஆஸ்திரேலியா- தென் ஆப்பிரிக்கா மோதுகின்றன.

இந்நிலையில் நாளை மற்றும் நாளை மறுநாள் நடைபெறவுள்ள அரையிறுதி போட்டிகள், நவ.19ம் தேதி நடைபெறவுள்ள இறுதிப் போட்டி ஆகியவை மழையின் காரணமாக தடைபெற நேரிட்டால் ரிசர்வ் டே முறையில் அடுத்த நாட்களில் போட்டிகள் நடைபெறும் என ஐசிசி அறிவித்துள்ளது.

மேலும் இந்த தொடரின் மொத்த பரிசுத்தொகை ரூ.83 கோடி என அறிவிக்கப்பட்டுள்ளது. உலக கோப்பை வெல்லும் அணிக்கு ரூ. 33 கோடி பரிசாக வழங்கப்படும் எனவும், இரண்டாம் இடம் பிடிக்கும் அணிக்கு ரூ. 16.5 கோடி பரிசாக வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.


Next Story