ஐ.எஸ்.எல். கால்பந்து: கடைசி லீக்கில் கேரளா பிளாஸ்டர்சை வீழ்த்தி ஐதராபாத் வெற்றி


ஐ.எஸ்.எல். கால்பந்து: கடைசி லீக்கில் கேரளா பிளாஸ்டர்சை வீழ்த்தி ஐதராபாத் வெற்றி
x

image courtesy: Indian Super League twitter

நேற்றிரவு கொச்சியில் நடந்த கடைசி லீக்கில் நடப்பு சாம்பியன் ஐதராபாத் எப்.சி-கேரளா பிளாஸ்டர்ஸ் அணிகள் மோதின.

கொச்சி,

11 அணிகள் பங்கேற்றுள்ள 9-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் நேற்றிரவு கொச்சியில் உள்ள நேரு ஸ்டேடியத்தில் நடந்த கடைசி லீக்கில் நடப்பு சாம்பியன் ஐதராபாத் எப்.சி. 1-0 என்ற கோல் கணக்கில் கேரளா பிளாஸ்டர்சை தோற்கடித்து 13-வது வெற்றியை பதிவு செய்தது. வெற்றிக்குரிய கோலை ஐதராபாத் வீரர் போர்ஜா ஹெரிரா 29-வது நிமிடத்தில் அடித்தார்.

லீக் சுற்று முடிவில் டாப்-2 இடங்களை பிடித்த மும்பை சிட்டி (46 புள்ளி), ஐதராபாத் எப்.சி. (42 புள்ளி) அணிகள் நேரடியாக அரைஇறுதிக்கு முன்னேறின. அடுத்த 4 இடங்களை பிடித்த ஏ.டி.கே. மோகன் பகான் (34 புள்ளி), பெங்களூரு எப்.சி. (34 புள்ளி), கேரளா பிளாஸ்டர்ஸ் (31 புள்ளி), ஒடிசா எப்.சி. (30 புள்ளி) ஆகிய அணிகள் 'பிளே-ஆப்' சுற்றை எட்டின. முன்னாள் சாம்பியன் சென்னையின் எப்.சி. 27 புள்ளியுடன் 8-வது இடத்துக்கு தள்ளப்பட்டு நடையை கட்டியது.

வருகிற 3-ந்தேதி நடக்கும் முதலாவது வெளியேற்றுதல் சுற்றில் பெங்களூரு-கேரளா அணிகளும், 4-ந்தேதி நடக்கும் 2-வது வெளியேற்றுதல் சுற்றில் ஏ.டி.கே.மோகன் பகான்- ஒடிசா அணிகளும் மோதுகின்றன. இவற்றில் வெற்றி பெறும் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெறும்.


Next Story