ஜூனியர் உலக கோப்பை கால்பந்து: இந்திய பெண்கள் அணி 2-வது தோல்வி


ஜூனியர் உலக கோப்பை கால்பந்து: இந்திய பெண்கள் அணி 2-வது தோல்வி
x

கோப்புப்படம்

ஜூனியர் உலக கோப்பை கால்பந்து தொடரில் இந்திய பெண்கள் அணி 2-வது தோல்வியை சந்தித்து அடுத்த சுற்று வாய்ப்பை இழந்தது.

புவனேஷ்வர்,

7-வது ஜூனியர் பெண்கள் உலக கோப்பை கால்பந்து போட்டி (17 வயதுக்குட்பட்டோர்) முதல்முறையாக இந்தியாவில் புவனேஷ்வர், கோவா, நவிமும்பை ஆகிய நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 16 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதுகின்றன. 'ஏ'பிரிவில் இடம் பிடித்துள்ள இந்திய அணி தனது 2-வது ஆட்டத்தில் மொராக்கோவுடன் நேற்றிரவு மோதியது.

முதல் பாதியில் எதிராளியின் தாக்குதலை ஓரளவு சமாளித்த இந்திய இளம் வீராங்கனைகள் பிற்பாதியில் முழுமையாக 'சரண்' அடைந்தனர். பந்தை 62 சதவீதம் தங்களது கட்டுப்பாட்டில் வைத்திருந்த மொராக்கோ 51, 62, , 90-வது நிமிடங்களில் கோல் போட்டது. இந்திய வீராங்கனைகளால் கடைசி வரை ஒரு கோல் கூட திருப்ப முடியவில்லை. முடிவில் மொராக்கோ 3-0 என்ற கோல் கணக்கில் இந்தியாவை வீழ்த்தியது.

ஏற்கனவே அமெரிக்காவிடம் 0-8 என்ற கோல் கணக்கில் படுதோல்வி அடைந்திருந்த இந்திய அணி 2-வது சறுக்கல் மூலம் கால்இறுதி வாய்ப்பை இழந்து வெளியேறியது. இந்திய அணி தனது கடைசி லீக்கில் பிரேசிலை வருகிற 17-ந்தேதி சந்திக்கிறது. முன்னதாக இதே பிரிவில் நடந்த பிரேசில்- அமெரிக்கா இடையிலான ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் 'டிரா'வில் முடிந்தது.


Next Story