பெண்கள் உலகக் கோப்பை கால்பந்து: 5-0 என்ற கோல் கணக்கில் இத்தாலியை வீழ்த்தியது சுவீடன்


பெண்கள் உலகக் கோப்பை கால்பந்து: 5-0 என்ற கோல் கணக்கில் இத்தாலியை வீழ்த்தியது சுவீடன்
x

பெண்கள் உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் சுவீடன் அணி 2-வது சுற்றுக்கு முன்னேறியது.

வெலிங்டன்,

பெண்களுக்கான 9-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டி ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாட்டில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 32 அணிகள் 8 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதி வருகின்றன. லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் 2-வது சுற்றுக்கு (ரவுண்ட் 16) தகுதி பெறும்.

இதில் 10-வது நாளான நேற்று 3 லீக் ஆட்டங்கள் நடைபெற்றன. நியூசிலாந்து தலைநகர் வெலிங்டனில் நடந்த ('ஜி' பிரிவு) ஆட்டம் ஒன்றில் சுவீடன்-இத்தாலி அணிகள் மோதின.

தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய சுவீடன் அணி 5-0 என்ற கோல் கணக்கில் இத்தாலியை எளிதில் தோற்கடித்தது. சுவீடன் அணியில் அமன்டா லெஸ்டிட் (39-வது, 50-வது நிமிடம்) 2 கோலும், பிரிடோலினா ரோல்போ (44-வது நிமிடம்), ஸ்டினா பிளாக்ஸ்டெனியஸ் (45-வது நிமிடம்), ரெபேக்கா பாம்விஸ்ட் (90-வது நிமிடம்) தலா ஒரு கோலும் அடித்தனர்.

2-வது ஆட்டத்தில் ஆடிய சுவீடன் அணி தொடர்ச்சியாக 2-வது வெற்றியை ருசித்ததுடன், 2-வது சுற்றுக்கு தகுதி பெற்றது. அந்த அணி முதலாவது ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்காவை வென்று இருந்தது. முதல் தோல்வியை சந்தித்த இத்தாலி அணி அடுத்த சுற்று வாய்ப்பில் நீடிக்கிறது.


Next Story