வீராங்கனையை கற்பழித்ததாக புகார்: இந்திய தேக்வாண்டோ சம்மேளன இணைச் செயலாளர் கைது


வீராங்கனையை கற்பழித்ததாக புகார்: இந்திய தேக்வாண்டோ சம்மேளன இணைச் செயலாளர் கைது
x
தினத்தந்தி 12 Feb 2017 9:45 PM GMT (Updated: 12 Feb 2017 8:12 PM GMT)

வீராங்கனையை கற்பழித்ததாக எழுந்த புகாரில் இந்திய தேக்வாண்டோ சம்மேளன இணைச் செயலாளர் சஞ்சய் ஷர்மா கைது செய்யப்பட்டுள்ளார்.

தன்பாத் (ஜார்கண்ட்),

வீராங்கனை புகார்

தற்காப்பு கலை விளையாட்டுகளில் ஒன்று தேக்வாண்டோ. ஒலிம்பிக் போட்டியாக இருந்த போதிலும், இந்தியாவில் இது பெரிய அளவில் பிரபலம் அடையவில்லை.

இந்த நிலையில் இந்திய இளம் தேக்வாண்டோ வீராங்கனை ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பெயர் வெளியிடப்படாத அந்த வீராங்கனை டெல்லி போலீசில் அளித்த புகார் மனுவில் ‘தேக்வாண்டோ சாம்பியன்ஷிப் போட்டியின் போது, தேக்வாண்டோ பயிற்சியாளர் கம்லேஷ் தாக்குர் என்னை கற்பழித்து விட்டார். அவர் மீது இந்திய தேக்வாண்டோ சம்மேளனத்தின் இணைச் செயலாளர் சஞ்சய் ஷர்மாவிடம் புகார் செய்தேன். விசாரிக்க வேண்டும் என்று கூறி ராஞ்சி அருகே ஹர்முவில் உள்ள தனது வீட்டிற்கு வருமாறு என்னை அழைத்தார். நானும் அங்கு சென்றேன். அங்கு அவரும் என்னை சீரழித்து விட்டார். பிறகு என்னை ஆபாசமாக புகைப்படம் எடுத்த அவர், அதை இணையதளத்தில் வெளியிடுவேன் என்று மிரட்டி தொடர்ந்து என்னை கற்பழித்தார். 2008-ம் ஆண்டில் இருந்து இந்த பாலியல் சித்ரவதையை அனுபவித்து வந்தேன். அவர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று புகார் மனுவில் கூறியிருந்தார்.

சஞ்சய் ஷர்மா கைது

சஞ்சய் ஷர்மா, ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர் என்பதால் இந்த வழக்கு அங்குள்ள பொக்காரோ மாவட்ட போலீசுக்கு மாற்றப்பட்டது.

பொக்காரோ போலீசார் இது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். பாதிக்கப்பட்ட பெண் 18 வயதுக்குட்பட்டவர் என்பதால் போலீசார், பாலியல் கொடுமையில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டப்பிரிவின் கீழ் சஞ்சய் ஷர்மா மீது வழக்கு பதிவு செய்து அவரை நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மனைவி மறுப்பு

சஞ்சய் ஷர்மாவின் மனைவி பிரதிபா இது திட்டமிட்ட சதி என்று குற்றம் சாட்டியுள்ளார். அவர் கூறுகையில், ‘அந்த வீராங்கனை ஏன் 9 ஆண்டுகள் கழித்து அதுவும் ராஞ்சியை தவிர்த்து டெல்லி போலீசில் புகார் அளிக்க வேண்டும்? இது திட்டமிட்ட சதி. இதற்கு பின்னால் முன்னாள் தேக்வாண்டே தலைவர் ஹரிஷ்குமார் இருக்கிறார். எனது கணவர் மற்றும் தேக்வாண்டோ பொதுச் செயலாளராக இருக்கும் எனது கணவரின் சகோதரர் பிரபாத் ஷர்மா ஆகியோரின் புகழை கெடுக்க அவர் இவ்வாறெல்லாம் செய்து கொண்டிருக்கிறார். தேக்வாண்டோ சம்மேளனத்தின் முக்கிய பதவியை பிடிப்பதற்காக அவர் எனது கணவர் மீது பொய் வழக்கு போட தூண்டியுள்ளார்’ என்று ஆவேசமாக கூறினார்.

Next Story