சர்வீஸ் போடுவதில் புதிய விதிமுறை: இந்திய வீராங்கனை சிந்து கருத்து


சர்வீஸ் போடுவதில் புதிய விதிமுறை: இந்திய வீராங்கனை சிந்து கருத்து
x
தினத்தந்தி 26 Dec 2017 10:15 PM GMT (Updated: 26 Dec 2017 7:33 PM GMT)

சர்வீஸ் போடுவதில் புதிய விதிமுறையை ஆல்–இங்கிலாந்து பேட்மிண்டனில் சோதனை செய்வது சரியல்ல என்று இந்திய வீராங்கனை சிந்து கருத்து தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

பேட்மிண்டனில் சர்வீஸ் போடுவதில் சில மாற்றங்கள் கொண்டு வரப்படுகிறது. புதிய விதிமுறைப்படி, ‘பந்தை சர்வீஸ் செய்யும் போது பேட்மிண்டன் மட்டை (ராக்கெட்) தரையில் இருந்து 1.15 மீட்டர் உயரத்துக்குள் தான் இருக்க வேண்டும்’ என்று கூறப்பட்டுள்ளது. இந்த விதிமுறை அடுத்த ஆண்டு ஆல்இங்கிலாந்து ஓபன் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியின் போது பரிசோதிக்கப்படுகிறது. இது இந்திய நட்சத்திர வீராங்கனையும், ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வென்றவருமான பி.வி.சிந்துவுக்கு அதிருப்தி அளித்துள்ளது.

இது தொடர்பாக சிந்து கூறுகையில், ‘என்னை பொறுத்தவரை சர்வீஸ் விதிமுறையில் மேற்கொள்ளப்படும் சோதனை முயற்சியை வேறு ஒரு போட்டித் தொடரில் கொண்டு வந்திருக்கலாம். ஏனெனில் ஆல்–இங்கிலாந்து சாம்பியன்ஷிப், ஒவ்வொருவருக்கும் மிகவும் கவுரவமிக்க போட்டியாகும். சர்வீஸ் விதிமுறையால் எனக்கு பெரிய அளவில் பிரச்சினை எதுவும் கிடையாது. பயிற்சி செய்தால் போதும். அதற்கு ஏற்ப என்னை மாற்றிக்கொள்ள முடியும்’ என்றார்.

சிந்து மேலும் கூறுகையில், ‘இந்த ஆண்டு போட்டி அட்டவணை மிகவும் நெருக்கடியாக இருப்பதாக சில வீராங்கனைகள் கூறியுள்ளனர். எனவே அதில் நாங்கள் விளையாடமாட்டோம் என்று சொல்ல முடியாது. அடுத்த ஆண்டின் போட்டி அட்டவணை கடினமாக இருப்பது உண்மை தான். உலக சாம்பியன்ஷிப், ஆசிய விளையாட்டு, காமன்வெல்த் விளையாட்டு ஆகிய போட்டிகளும் நடைபெற இருக்கின்றன. குறிப்பிட்ட தொடர்களை தேர்வு செய்து, பயிற்சியாளரின் ஆலோசனைப்படி விளையாடுவேன்’ என்றார்.



Next Story