ஆல்-இங்கிலாந்து பேட்மிண்டன்: கால்இறுதியில் பி.வி.சிந்து உலக சாம்பியன் ஒகுஹராவை சந்திக்கிறார்


ஆல்-இங்கிலாந்து பேட்மிண்டன்: கால்இறுதியில் பி.வி.சிந்து உலக சாம்பியன் ஒகுஹராவை சந்திக்கிறார்
x
தினத்தந்தி 15 March 2018 9:15 PM GMT (Updated: 15 March 2018 8:58 PM GMT)

புகழ்பெற்ற ஆல்-இங்கிலாந்து பேட்மிண்டன் போட்டி பர்மிங்காமில் நடந்து வருகிறது.

பர்மிங்காம்,

புகழ்பெற்ற ஆல்-இங்கிலாந்து பேட்மிண்டன் போட்டி பர்மிங்காமில் நடந்து வருகிறது. இதில் நேற்று பெண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் 3-ம் நிலை வீராங்கனை பி.வி.சிந்து (இந்தியா), தரவரிசையில் 11-வது இடம் வகிக்கும் நிட்சான் ஜின்டாபோலை (தாய்லாந்து) எதிர்கொண்டார்.

இருவரும் சரி சமபலத்துடன் மல்லுகட்டியதால் ஆட்டத்தில் அனல் பறந்தது. முதல் இரு செட்டுகளை இருவரும் தலா ஒன்று வீதம் வசப்படுத்திய நிலையில் கடைசி செட்டில் விறுவிறுப்பு அதிகமானது. இந்த செட்டில் ஒரு கட்டத்தில் சிந்து 12-16 என்ற கணக்கில் பின்தங்கினார். ஆனாலும் சோர்ந்து போய்விடவில்லை. அதன் பிறகு சுதாரித்துக் கொண்டு சில சாதுர்யமான ஷாட்டுகளை அடித்து புள்ளிகளை சேகரித்த சிந்து 18-18 என்ற கணக்கில் சமநிலைக்கு கொண்டு வந்தார். இதனால் ஜின்டாபோல் நெருக்கடிக்குள்ளாக, அதை சரியாக பயன்படுத்திக் கொண்ட சிந்து தொடர்ந்து 3 புள்ளிகளை பெற்று வெற்றியை உறுதிப்படுத்தினார். 67 நிமிடங்கள் நீடித்த திரிலிங்கான இந்த மோதலில் பி.வி.சிந்து 21-13, 13-21, 21-18 என்ற செட் கணக்கில் ஜின்டாபோலை தோற்கடித்து கால்இறுதிக்கு தகுதி பெற்றார்.

சிந்து அடுத்து உலக சாம்பியன் நஜோமி ஒகுஹராவுடன் (ஜப்பான்) பலப்பரீடசை நடத்துகிறார். கடந்த ஆண்டு உலக சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்தில் ஒகுஹராவிடம் தான் சிந்து தோற்று இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story