துளிகள்


துளிகள்
x
தினத்தந்தி 13 July 2018 9:30 PM GMT (Updated: 13 July 2018 8:25 PM GMT)

பாங்காங்கில் நடந்து வரும் தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் போட்டியில் பி.வி.சிந்து அரைஇறுதிக்கு முன்னேற்றம்.


* பாங்காங்கில் நடந்து வரும் தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் போட்டியில் நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் கால்இறுதி ஆட்டம் ஒன்றில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து 21-19, 21-13 என்ற நேர் செட் கணக்கில் சோனியா செக்கை (மலேசியா) தோற்கடித்து அரைஇறுதிக்கு முன்னேறினார்.

* காலேயில் நடந்து வரும் இலங்கைக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 2-வது நாளான நேற்று தென்ஆப்பிரிக்க அணி முதல் இன்னிங்சில் 126 ரன்னில் சுருண்டது. இலங்கை மண்ணில் தென்ஆப்பிரிக்க அணியின் மோசமான ஸ்கோர் இதுவாகும். அந்த அணியில் அதிகபட்சமாக கேப்டன் பாப் டுபிளிஸ்சிஸ் 49 ரன்கள் எடுத்தார். இலங்கை தரப்பில் தில்ருவான் பெரேரா 4 விக்கெட்டும், லக்மல் 3 விக்கெட்டும், ஹெராத் 2 விக்கெட்டும் வீழ்த்தினர். 161 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை ஆடிய இலங்கை அணி ஆட்ட நேரம் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 111 ரன்கள் எடுத்துள்ளது.

* கிங்ஸ்டனில் நேற்று முன்தினம் தொடங்கிய வங்காளதேசத்திற்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்சில் 354 ரன்கள் சேர்த்து ஆல்-அவுட் ஆனது. கிரேக் பிராத்வெய்ட் சதம் (110 ரன்) அடித்தார்.

* இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனும், சிறந்த பீல்டருமான முகமது கைப், சர்வதேச மற்றும் முதல் தரம் உள்பட அனைத்து வகையான கிரிக்கெட் போட்டியில் இருந்தும் ஓய்வு பெறுவதாக நேற்று அறிவித்தார். 2006-ம் ஆண்டுடன் இந்திய அணியில் இருந்து ஓரங்கட்டப்பட்ட கைப் அதன் பிறகு முதல்தர போட்டிகளில் மட்டும் விளையாடி வந்தார். அவர் தனது ஓய்வு முடிவை இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகிகளுக்கு இ-மெயில் மூலம் தெரிவித்துள்ளார். 37 வயதான முகமது கைப் இந்திய அணிக்காக 125 ஒருநாள் மற்றும் 13 டெஸ்ட் போட்டியில் விளையாடி இருக்கிறார்.

Next Story