துளிகள்


துளிகள்
x
தினத்தந்தி 22 Nov 2018 9:00 PM GMT (Updated: 22 Nov 2018 8:25 PM GMT)

2011-ம் ஆண்டு நடந்த உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதி ஆட்டத்தில் இந்திய அணி, இலங்கையை வீழ்த்தி கோப்பையை வென்றது.

* இலங்கை - இங்கிலாந்து அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கொழும்பில் இன்று தொடங்குகிறது. முதல் இரு டெஸ்டுகளிலும் வெற்றி பெற்ற ஜோ ரூட் தலைமையிலான இங்கிலாந்து அணி தொடரை முழுமையாக வெல்லும் வேட்கையில் இருக்கிறது. வெளிநாட்டு அணிகளில் ஆஸ்திரேலியா (2004-ம் ஆண்டு) மற்றும் இந்தியா (2017-ம் ஆண்டு) மட்டுமே இலங்கையை அதன் சொந்த மண்ணில் 3-0 என்ற கணக்கில் தோற்கடித்து இருக்கிறது. இந்த வரிசையில் இணைய இங்கிலாந்து தீவிர முனைப்பு காட்டி வருகிறது. இலங்கை அணியில் காயத்தால் கேப்டன் தினேஷ் சன்டிமால் இந்த டெஸ்டிலும் ஆடவில்லை. சுரங்கா லக்மல் அணியை வழிநடத்துவார்.

* ரஞ்சி கிரிக்கெட்டில் ஆடுவதை தவிர்த்து இந்தியா-ஆஸ்திரேலியா முதலாவது 20 ஓவர் போட்டியின் போது வர்ணனையாளராக பணியாற்றியது ஏன்? என்பது குறித்து சவுராஷ்டிரா பேட்ஸ்மேன் ராபின் உத்தப்பா விளக்கம் அளித்துள்ளார். ‘கணுக்காலில் ஏற்பட்ட காயத்துக்கு ஆபரேஷன் செய்து, அதில் இருந்து மீண்டு வருகிறேன். போட்டிக்கு இன்னும் முழு உடல்தகுதியை எட்டாததால், ஓய்வு நேரத்தில் வர்ணனையாளர் பணியை செய்தேன்’ என்று உத்தப்பா கூறியுள்ளார்.

* ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி அடுத்த ஆண்டு மார்ச் அல்லது ஏப்ரலில் ஐக்கிய அரபு அமீரகத்தில் பாகிஸ்தானுடன் 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாட திட்டமிட்டுள்ளது. இந்த நிலையில் இவற்றில் இரண்டு ஒரு நாள் போட்டியை மட்டும் பாகிஸ்தானில் நடத்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் விரும்புகிறது. இதற்காக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்திடம் அவர்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள். 1998-ம் ஆண்டு பிறகு ஆஸ்திரேலிய அணி, பாகிஸ்தானில் விளையாடியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

* 2011-ம் ஆண்டு நடந்த உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதி ஆட்டத்தில் இந்திய அணி, இலங்கையை வீழ்த்தி கோப்பையை வென்றது. இந்த ஆட்டத்தில் கேப்டனாக இருந்த டோனி 5-வது பேட்டிங் வரிசையில் இறங்கி 91 ரன்கள் விளாசி ஆட்டநாயகன் விருது பெற்றார். யுவராஜ்சிங்குக்கு முன்பாக களம் இறங்கியது ஏன் என்பது குறித்து நிகழ்ச்சி ஒன்றில் அவர் வெளியிட்டு இருக்கிறார். அவர் கூறுகையில், ‘இலங்கையைச் சேர்ந்த பந்து வீச்சாளர்களில் பெரும்பாலானவர்கள் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ஆடியதை அறிவேன். அந்த சமயத்தில் முரளிதரன் பந்து வீசிக்கொண்டிருந்ததால் நான் முன்கூட்டியே இறங்க தீர்மானித்தேன். ஏனெனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கான வலை பயிற்சியின் போது முரளிதரனின் பந்து வீச்சை அதிகமாக சந்தித்து இருந்தேன். அதனால் அவரது பந்து வீச்சை சிரமமின்றி எதிர்கொண்டு ரன்கள் குவிக்க முடியும் என்று நம்பினேன். இது தான் முன்வரிசையில் நான் ஆடியதற்கு முக்கிய காரணம்’ என்றார்.


Next Story