புரோ கைப்பந்து லீக்: மும்பை அணி அரைஇறுதிக்கு தகுதி


புரோ கைப்பந்து லீக்: மும்பை அணி அரைஇறுதிக்கு தகுதி
x
தினத்தந்தி 18 Feb 2019 10:45 PM GMT (Updated: 18 Feb 2019 10:33 PM GMT)

புரோ கைப்பந்து லீக் போட்டியில், மும்பை அணி அரைஇறுதிக்கு தகுதிபெற்றது.

சென்னை,

முதலாவது புரோ கைப்பந்து லீக் போட்டி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்து வருகிறது. இதில் நேற்று இரவு நடந்த 15-வது மற்றும் கடைசி லீக் ஆட்டத்தில் ஆமதாபாத் டிபென்டர்ஸ்- யு மும்பா வாலி அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் மும்பை அணி 10-15, 15-12, 15-13, 15-12, 15-8 என்ற செட் கணக்கில் ஆமதாபாத் அணியை வீழ்த்தி 2-வது வெற்றியை ருசித்ததுடன் அரைஇறுதிக்கு முன்னேறியது. நேற்றுடன் லீக் ஆட்டம் முடிவுக்கு வந்தது. லீக் ஆட்டம் முடிவில் கோழிக்கோடு ஹீரோஸ் அணி 5 ஆட்டங்களிலும் வெற்றி பெற்று முதலிடத்தை பிடித்தது. கொச்சி புளூ ஸ்பைக்கர்ஸ் அணி 4 வெற்றி, ஒரு தோல்வியுடன் 2-வது இடமும், சென்னை ஸ்பார்ட்டன்ஸ், யு மும்பா வாலி (மும்பை) அணிகள் தலா 2 வெற்றி, 3 தோல்வியுடன் 4 புள்ளிகள் பெற்று சமநிலை வகித்தன. செட் விகிதாச்சாரம் அடிப்படையில் சென்னை அணி 3-வது இடத்தையும், மும்பை அணி 4-வது இடத்தையும் பிடித்தன. முதல் 4 இடங்களை பிடித்த அணிகள் அரை இறுதிக்கு முன்னேறின. ஐதராபாத் பிளாக்ஹாக்ஸ் அணி 2 வெற்றி, 3 தோல்வியுடன் 4 புள்ளிகள் பெற்றாலும் செட் விகிதாச்சாரம் அடிப்படையில் 5-வது இடம் பிடித்து அரைஇறுதி வாய்ப்பை இழந்தது. ஆமதாபாத் டிபென்டர்ஸ் 5 ஆட்டங்களிலும் தோல்வி கண்டு கடைசி இடத்துக்கு தள்ளப்பட்டு வெளியேறியது.

இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெறும் முதலாவது அரைஇறுதியில் கோழிக்கோடு ஹீரோஸ்-யு மும்பா வாலி அணிகள் மோதுகின்றன. இரவு 7 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை சோனி சிக்ஸ், சோனி டென்3 சேனல்கள் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது. நாளை நடைபெறும் 2-வது அரைஇறுதியில் சென்னை ஸ்பார்ட்டன்ஸ்-கொச்சி புளூ ஸ்பைக்கர்ஸ் அணிகள் சந்திக்கின்றன.


Next Story