கத்தார்வாழ் தமிழர்கள் வீட்டிற்கு அழைத்து சென்று நெகிழ வைத்தனர் சென்னை திரும்பிய ‘தங்க மங்கை’ கோமதி பேட்டி


கத்தார்வாழ் தமிழர்கள் வீட்டிற்கு அழைத்து சென்று நெகிழ வைத்தனர் சென்னை திரும்பிய ‘தங்க மங்கை’ கோமதி பேட்டி
x
தினத்தந்தி 26 April 2019 10:45 PM GMT (Updated: 26 April 2019 8:31 PM GMT)

கத்தார்வாழ் தமிழர்கள் தங்களது வீட்டிற்கு அழைத்து சென்று தனக்கு விருந்தளித்து உபசரித்ததாக ஆசிய தடகளத்தில் தங்கம் வென்ற தமிழக வீராங்கனை கோமதி கூறியுள்ளார்.

சென்னை, 

கத்தார் தலைநகர் தோகா வில் நடந்த ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா 3 தங்கம், 7 வெள்ளி, 7 வெண்கலம் என்று மொத்தம் 17 பதக்கங்களை குவித்து 4-வது இடம் பிடித்தது. இதில் இந்தியாவுக்கு முதலாவது தங்கப்பதக்கத்தை பெற்றுத்தந்தவர் தமிழகத்தை சேர்ந்த ஓட்டப்பந்தய வீராங்கனை கோமதி. 800 மீட்டர் ஓட்டத்தில் களம் கண்ட அவர் தொடக்கத்தில் சற்று பின்தங்கினாலும் அதன் பிறகு துரிதமாக முன்னேறி 2 நிமிடம் 02.70 வினாடிகளில் பந்தய தூரத்தை கடந்து தங்கப்பதக்கத்தை அறுவடை செய்தார்.

30 வயதான கோமதியின் சொந்த ஊர் திருச்சி அருகே உள்ள முடிகண்டம் என்ற கிராமம். 10 ஆண்டுகளுக்கு முன்பு தடகளத்தில் கால்பதித்த அவர் இப்போது தங்க மங்கையாக உருவெடுத்து இருக்கிறார். இன்று சாதனை மங்கையாக அறியப்பட்டாலும் இதற்காக அவர் பட்ட கஷ்டங்கள் ஏராளம். கூலித்தொழிலாளியான இவரது தந்தை மாரிமுத்து கடந்த 2016-ம் ஆண்டு இறந்து விட்டார். ஆனாலும் விடா முயற்சியோடு போராடியதற்கான பலன் இப்போது அவருக்கு கிடைத்துள்ளது.

முழுக்க முழுக்க விளையாட்டில் மட்டுமே கவனம் செலுத்தியதால் கோமதிக்கு சொல்லிக்கொள்ளும் அளவுக்கு தோழிகள் கிடையாது. ஏன் அவரது கையில் இருப்பது கூட சாதாரண ஒரு மொபைல் போன் தான். வாட்ஸ் அப் உள்ளிட்ட வசதிகள் எதுவும் இல்லாத இந்த செல்போன் மூலம் அவரால் அங்கிருந்து சொந்த பந்தங்களை தொடர்பு கொள்ள முடியாமல் தவித்தது சோகமான ஒன்று. மற்றவர்களின் உதவியுடன் ஒரு சில நேரம் விருப்பமானவர்களிடம் பேசியிருக்கிறார்.

கத்தார் தமிழர்கள்

தமிழக வீராங்கனை ஒருவர் பதக்கம் வென்றதை அறிந்ததும் அங்குள்ள தமிழர்கள் அவரை அதிகாரிகளின் அனுமதியோடு அழைத்து சென்று விருந்தளித்து குளிர வைத்து இருக்கிறார்கள். இது குறித்து கோமதி ‘தினத்தந்தி’ நிருபரிடம் கூறியதாவது:-

கத்தாரில் நிறைய தமிழ் குடும்பங்கள் உள்ளன. நான் பதக்கம் வென்றதை கேள்விப்பட்டு என்னை அவர்களது வீட்டிற்கு அழைத்து சென்றனர். அங்கு ஆரத்தி எடுத்து வரவேற்ற போது கண்கலங்கி போனேன். எனக்கு பிடித்தமான உணவுகளை சமைத்து கொடுத்து உபசரித்தனர். தாயார், அண்ணன், அக்கா என்று ஒரு சில உறவுகளை மட்டுமே கொண்ட எனக்கு புது உறவு கிடைத்தது போல் உணர்ந்தேன். என்னை அவர்களது வீட்டு மகளாக பாவித்து கவனித்தனர். எனது வாழ்க்கையில் இப்படியொரு சந்தோஷத்தை அனுபவித்ததே இல்லை.

என்னிடம் ‘ஸ்மார்ட் போன்’ இல்லை என்பதை தெரிந்து கொண்டு உடனடியாக மூன்று செல்போன்களை வாங்கிக் கொடுத்தனர். மேலும் சிறுசிறு பரிசுகளையும் தந்து பாசமழையில் என்னை நெகிழ வைத்து விட்டனர். இந்த சந்திப்பில் கிட்டத்தட்ட 200 தமிழர்கள் இணைந்து விட்டனர். நான் உண்மையிலேயே கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்டதாகவே உணர்ந்தேன். நாடு திரும்பும்போது விமான நிலையம் வரை வந்து வழியனுப்பிய அவர்களை என்றென்றும் மறக்க மாட்டேன்.

தந்தைக்கு சமர்ப்பிக்கிறேன்

ஆசிய தடகளத்தில் நிச்சயம் பதக்கம் வெல்ல முடியும் என்று நம்பிக்கையுடன் இருந்தேன். ஆனால் தங்கப்பதக்கம் வெல்வேன் என்று எதிர்பார்க்கவில்லை. பதக்கமேடையில் ஏறியதும், தேசிய கீதம் இசைக்கப்பட்ட போது கண்கள் குளமானது. இந்த தருணத்திற்காகத் தான் நான் காத்திருந்தேன். கனவு நனவானதை நினைத்து எல்லையில்லா மகிழ்ச்சி அடைந்தேன். பயிற்சியின் போது எனக்கு பக்கபலமாக இருந்தவர் எனது தந்தை மாரிமுத்து. இப்போது அவர் எங்களுடன் இல்லாவிட்டாலும் அவருக்கு இந்த பதக்கத்தை அர்ப்பணிக்கிறேன்.

நான் தற்போது பெங்களூருவில் பணியாற்றி வருகிறேன். எனது வேலையை தமிழகத்திற்கு மாற்றி தந்தால் மகிழ்ச்சியாக இருக்கும். போட்டிக்கு தயாராவதற்கு, வெளிநாடுகளுக்கு சென்று போட்டிகளில் பங்கேற்பதற்காக எனக்கு ஸ்பான்சர்ஷிப் தேவை. தமிழக அரசு உதவிகரம் நீட்டினால், என்னால் இன்னும் வெற்றிகளை குவிக்க முடியும். என்னை போன்ற திறமையான வீரர், வீராங்கனைகளை அடையாளம் கண்டு அரசாங்கம் உதவிட வேண்டும். எங்களது கிராமத்தில் பஸ், சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் எதுவும் இல்லை. இதனால் மக்கள் மிகவும் கஷ்டப்படுகிறார்கள். முதலில் இதைசரி செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண் டும்.

ஆசிய போட்டியில் வாகை சூடியதன் மூலம் உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டிக்கும் தகுதி பெற முடியும் என்ற நம்பிக்கையுடன் உள்ளேன். உலக போட்டியில் சாதிக்க வேண்டும் என்பது தான் எனது அடுத்த இலக்கு. இன்னும் 2-3 தினங்களில் மீண்டும் பயிற்சியை தொடங்கி விடுவேன்.

இவ்வாறு கோமதி கூறி னார்.

ரூ.3 லட்சம் பரிசு

முன்னதாக நேற்று விமானம் மூலம் சென்னை திரும்பிய கோமதிக்கு விமான நிலையத்தில் உற்சாகமான வரவேற்பு அளிக்கப்பட்டது. தனியார் பள்ளி மாணவ, மாணவிகள் மலர்கொத்து கொடுத்து வரவேற்றனர். ஆலப்பாக்கம் வேலம்மாள் வித்யாலயா பள்ளியில் நடந்த பாராட்டு விழாவில் கலந்து கொண்ட கோமதிக்கு பள்ளி நிர்வாகம் சார்பில் ரூ.3 லட்சம் ஊக்கத்தொகையாக வழங்கப்பட்டது.

Next Story