அர்ஜூனா விருது பெறுகிறார், சஞ்சிதா


அர்ஜூனா விருது பெறுகிறார், சஞ்சிதா
x
தினத்தந்தி 25 Jun 2020 10:35 PM GMT (Updated: 25 Jun 2020 10:35 PM GMT)

இந்திய முன்னணி பளுதூக்குதல் வீராங்கனை சஞ்சிதா சானு 2014, 2018-ம் ஆண்டு காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளில் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்தார்


புதுடெல்லி, 

இந்திய முன்னணி பளுதூக்குதல் வீராங்கனை சஞ்சிதா சானு 2014, 2018-ம் ஆண்டு காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளில் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்தார். அவர் ஊக்கமருந்து சர்ச்சையில் சிக்கியதாக 2018-ம் ஆண்டு மே மாதம் இடைநீக்கம் செய்யப்பட்டார். பிறகு 2019-ம் ஆண்டு ஜனவரி மாதம் இடைநீக்கம் ரத்து செய்யப்பட்டது. அவரிடம் இருந்து எடுக்கப்பட்ட சிறுநீர் மாதிரியின் நம்பர் மாறியதால் தவறு நடந்து விட்டதாக சர்வதேச பளுதூக்குதல் சம்மேளனம் கூறியது. இருப்பினும் ஊக்கமருந்து குற்றச்சாட்டு 2 ஆண்டுகளாக நிலுவையில் இருந்ததால் அவரின் பெயர் அர்ஜூனா விருதுக்கு தேர்வு செய்யப்படாமல் நிராகரிக்கப்பட்டது.

இதற்கிடையே டெல்லி ஐகோர்ட்டில் சஞ்சிதா தொடர்ந்த வழக்கில் ‘அர்ஜூனா விருதுக்கு சஞ்சிதாவின் பெயரை விருது கமிட்டி பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும். அந்த முடிவை சீல் வைத்த கவரில் வைத்து இருக்க வேண்டும். அவர் ஊக்கமருந்து குற்றச்சாட்டில் இருந்து விடுபட்ட பிறகு முடிவை வெளியிட வேண்டும்’ என்று நீதிபதி 2018-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் உத்தரவிட்டிருந்தார்.

இந்த நிலையில் ஊக்கமருந்து விவகாரத்தில் இருந்து சஞ்சிதா சானு முழுமையாக விடுவிக்கப்பட்டதாக பளுதூக்குதல் சம்மேளனம் சமீபத்தில் அதிகாரபூர்வமாக அறிவித்தது. இதையடுத்து மணிப்பூரைச் சேர்ந்த சஞ்சிதா ஒரு வழியாக அர்ஜூனா விருதை பெறுவது உறுதியாகி இருக்கிறது.

இது குறித்து மத்திய விளையாட்டுத்துறை அமைச்சக வட்டாரங்கள் கூறுகையில், ‘சஞ்சிதா மீதான ஊக்கமருந்து குற்றச்சாட்டுகளை சர்வதேச பளுதூக்குதல் சம்மேளனம் நீக்கி விட்டது. எனவே டெல்லி ஐகோர்ட்டின் உத்தரவின்படி அவருக்கு அர்ஜூனா விருது வழங்கப்படும்’ என்று தெரிவித்தது. அவருக்கு 2018-ம் ஆண்டுக்கான அர்ஜூனா விருது வழங்கப்பட இருப்பதாக இந்திய பளுதூக்குதல் சம்மேளன பொதுச்செயலாளரும் உறுதிப்படுத்தி இருக்கிறார்.


Next Story