‘டோக்கியோ தோல்வி குறித்து வருந்துவதற்கு நேரமில்லை’ வினேஷ் போகத் சொல்கிறார்


‘டோக்கியோ தோல்வி குறித்து வருந்துவதற்கு நேரமில்லை’ வினேஷ் போகத் சொல்கிறார்
x
தினத்தந்தி 27 Aug 2021 7:17 PM GMT (Updated: 27 Aug 2021 7:17 PM GMT)

‘டோக்கியோ தோல்வி குறித்து வருந்துவதற்கு நேரமில்லை’ வினேஷ் போகத் சொல்கிறார்.

புதுடெல்லி,

இந்திய நட்சத்திர மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் டோக்கியோ ஒலிம்பிக்கில் கால்இறுதியில் அதிர்ச்சிகரமாக தோல்வியை தழுவினார். இந்த போட்டியின் போது சக குழுவினருடன் தங்க மறுத்தது, அணிக்கான அதிகாரபூர்வ சீருடையை அணிய மறுத்தது ஆகிய சர்ச்சைகளில் சிக்கிய வினேஷ் போகத் தற்காலிகமாக மல்யுத்தத்தில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார். தனது ஒழுங்கீன செயலுக்கு மன்னிப்பு கோரி இந்திய மல்யுத்த சம்மேளனத்துக்கு விளக்கம் அளித்ததை தொடர்ந்து அவர் எச்சரிக்கையுடன் விடுவிக்கப்பட்டார்.

இந்த நிலையில் 2024-ம் ஆண்டு பாரீஸ் ஒலிம்பிக் போட்டி வரை இந்திய மல்யுத்தத்துக்கு டாட்டா மோட்டார்ஸ் நிறுவனம் ஸ்பான்சர்ஷிப்பை நீட்டிப்பு அளித்து நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற வினேஷ் போகத்திடம் டோக்கியோ ஒலிம்பிக் அனுபவம் குறித்து கேட்கப்பட்டது. அதற்கு 26 வயதான வினேஷ் போகத் கூறுகையில், ‘இது எனது 2-வது ஒலிம்பிக். 2016-ம் ஆண்டு ரியோ ஒலிம்பிக்கின் போது காயமடைந்தேன். இப்போது தோல்வி அடைந்திருக்கிறேன். அதை ஏற்றுக்கொள்ளத் தான் வேண்டும். அடுத்து வரும் போட்டிகளுக்கு முன்பாக எனது பலவீனங்களை சரி செய்வதில் கவனம் செலுத்துவேன். சீனியர் மட்டத்தில் விளையாடும் போது, தோல்வி குறித்து வருந்துவதற்கு போதிய நேரம் கிடைப்பதில்லை. ஏனெனில் அடுத்த ஒலிம்பிக்குக்கு தயாராகும் பணியை தொடங்க வேண்டும். மேலும் அடுத்தடுத்து சர்வதேச போட்டிகள் வருகின்றன. இதில் முக்கியமான விஷயம், உயர்ந்த நிலையில் நாம் இருக்க வேண்டும். ஆனால் தொடர்ந்து முன்னணியில் இருப்பது சவாலானது' என்றார்.


Next Story