பாராஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற மாரியப்பனுக்கு பதவி உயர்வு - ‘சாய்’ முடிவு


பாராஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற மாரியப்பனுக்கு பதவி உயர்வு - ‘சாய்’ முடிவு
x
தினத்தந்தி 29 Sep 2021 12:02 AM GMT (Updated: 29 Sep 2021 12:02 AM GMT)

பாராஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற மாரியப்பன் பதவி உயர்வு பெற்று இருக்கிறார்கள்.

புதுடெல்லி,

சமீபத்தில் நடந்த டோக்கியோ பாராஒலிம்பிக் போட்டியில் உயரம் தாண்டுதலில் வெள்ளிப்பதக்கம் கைப்பற்றிய தமிழக வீரர் மாரியப்பன், வெண்கலப்பதக்கம் பெற்ற பீகார் வீரர் ஷரத்குமார், டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் மயிரிழையில் வெண்கலப்பதக்கத்தை தவற விட்ட இந்திய பெண்கள் ஆக்கி அணியின் கேப்டன் ராணி ராம்பால், கோல்கீப்பர் சவிதா பூனியா ஆகியோர் இந்திய விளையாட்டு ஆணையத்தில் (சாய்) பணியாற்றி வருகிறார்கள். 

ஒலிம்பிக் மற்றும் பாராஒலிம்பிக் போட்டிகளில் அசத்திய இவர்களுக்கு சிறப்பு பதவி உயர்வு அளிக்க டெல்லியில் நேற்று நடந்த இந்திய விளையாட்டு ஆணைய நிர்வாக கவுன்சில் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. இதன்படி சவிதா பூனியா உதவி பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து பயிற்சியாளராகவும், ராணி ராம்பால் பயிற்சியாளர் பதவியில் இருந்து சீனியர் பயிற்சியாளராகவும், மாரியப்பன் சீனியர் பயிற்சியாளரில் இருந்து தலைமை பயிற்சியாளராகவும், ஷரத் குமார் உதவி பயிற்சியாளரில் இருந்து பயிற்சியாளராகவும் பதவி உயர்வு பெற்று இருக்கிறார்கள். 

மேலும் கல்லீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மரணம் அடைந்த ஆசிய விளையாட்டு போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற முன்னாள் குத்துச்சண்டை வீரர் டிங்கோசிங் குடும்பத்துக்கு ரூ.6.87 லட்சம் நிதியுதவி அளிக்க அனுமதி அளிக்கப்பட்டது.

Next Story