உலக பேட்மிண்டன் போட்டி: ஆண்கள் ஒற்றையர் பிரிவில் குன்லாவுத் தங்கம் வென்று சாதனை


உலக பேட்மிண்டன் போட்டி: ஆண்கள் ஒற்றையர் பிரிவில் குன்லாவுத் தங்கம் வென்று சாதனை
x

உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் தாய்லாந்து வீரர் குன்லாவுத் தங்கப்பதக்கத்தை சொந்தமாக்கினார்.

ஹோபன்ஹேகன்,

28-வது உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி டென்மார்க் தலைநகர் ஹோபன்ஹேகன் நகரில் கடந்த ஒரு வாரமாக நடந்தது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த பரபரப்பான இறுதி ஆட்டத்தில் தரவரிசையில் 3-வது இடம் வகிக்கும் தாய்லாந்து வீரர் குன்லாவுத் விதித் சரண் 19-21, 21-18, 21-7 என்ற செட் கணக்கில் கோடாய் நராவ்காவை (ஜப்பான்) வீழ்த்தி தங்கப்பதக்கத்தை சொந்தமாக்கினார்.

இந்த வெற்றிக்காக அவர் 1 மணி 49 நிமிடங்கள் போராட வேண்டி இருந்தது. உலக பேட்மிண்டன் ஆண்கள் ஒற்றையரில் தங்கப்பதக்கத்தை உச்சிமுகர்ந்த முதல் தாய்லாந்து வீரர் இவர் தான். முன்னதாக இந்திய வீரர் எச்.எஸ்.பிரனாய், இவரிடம் அரைஇறுதியில் தோற்று வெண்கலப்பதக்கம் பெற்றது குறிப்பிடத்தக்கது.

இதன் பெண்கள் பிரிவில் 'நம்பர் ஒன்' வீராங்கனை அன்சே யங் (தென்கொரியா) 21-12, 21-10 என்ற நேர் செட்டில் 3 முறை உலக சாம்பியனான கரோலினா மரினை (ஸ்பெயின்) பந்தாடி தங்கப்பதக்கத்தை ருசித்தார். இதன் மூலம் உலக பேட்மிண்டன் ஒற்றையர் பிரிவில் தங்கத்தை கழுத்தில் ஏந்திய முதல் தென்கொரியா வீராங்கனை என்ற வரலாற்று சாதனையையும் 21 வயதான அன்சே யங் படைத்தார். இந்த ஆண்டில் அவர் வென்ற 8-வது பட்டம் இதுவாகும்.

இதன் இரட்டைர் பிரிவில் சீன வீராங்கனைகள் சென் கிங்சென்- ஜியா யிபேன் ஜோடி 21-16, 21-12 என்ற நேர் செட்டில் இந்தோனேசியாவின் அப்ரியானி ரஹாயு- சிதி படிவா சில்வா இணையை வீழ்த்தி தொடந்து 3-வது முறையாக தங்கம் வென்ற முதல் பெண்கள் இரட்டையர் ஜோடி என்ற பெருமையை பெற்றனர்.


Next Story