காமன்வெல்த் போட்டி: இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கம் - பதக்கம் வென்று அச்சிந்தா ஷூலி அசத்தல்..!

Image courtesy: ANI Twitter
பளுதூக்கும் போட்டியில் இந்தியாவின் அச்சிந்தா ஷூலி 313 கிலோ தூக்கி முதலிடம் பெற்று தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார்.
பர்மிங்காம்,
72 நாடுகள் பங்கேற்றுள்ள 22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இந்தியா இதுவரை பளுதூக்குதலில் இரண்டு தங்கம், இரண்டு வெள்ளி, ஒரு வெண்கலம் என மொத்தம் 5 பதக்கங்களை வென்றுள்ளது.
இந்நிலையில், ஆண்களுக்கான பளு தூக்குதலின் (73 கிலோ) இறுதி போட்டி நேற்று நடைபெற்றது. அதில் இந்தியாவின் அச்சிந்தா ஷூலி பங்கேற்றார். இப்போட்டியில் அவர் மொத்தம் 313 கிலோ தூக்கி தங்கப்பதக்கத்தை வென்று அசத்தினார். அவர் ஸ்னாட்ச் பிரிவில் 143 கிலோவும், கிளீன் அண்ட் ஜெர்க்கில் 170 கிலோவும் தூக்கினார்.
மலேசியாவின் ஹிதாயத் முஹம்மது 303 கிலோ எடையுடன் இரண்டாவது இடத்தையும், கனடாவின் ஷாட் டார்சினி 298 கிலோ எடையுடன் வெண்கலப் பதக்கத்தையும் கைப்பற்றினார்.
அச்சிந்தா ஷூலி தங்கப்பதக்கம் வென்றதன் மூலம் இந்தியாவின் பதக்க எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது. இந்தியா இதுவரை 3 தங்கம், 2 வெள்ளி, 1 வெண்கலம் வென்றுள்ளது.






