காமன் வெல்த் ஸ்குவாஷ் போட்டி: காலிறுதிக்கு முன்னேறினார் இந்தியாவின் சவுரவ் கோசல்


காமன் வெல்த் ஸ்குவாஷ் போட்டி: காலிறுதிக்கு முன்னேறினார் இந்தியாவின் சவுரவ் கோசல்
x

ஸ்குவாஷ் போட்டியில் இந்தியாவின் சவுரவ் கோசல் 3-0 என்ற கணக்கில் கனடாவின் டேவிட் பெய்லார்ஜனை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார்.

பர்மிங்காம்,

72 நாடுகள் பங்கேற்றுள்ள 22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இந்தியா இதுவரை பளுதூக்குதலில் இரண்டு தங்கம், இரண்டு வெள்ளி, ஒரு வெண்கலம் என மொத்தம் 5 பதக்கங்களை வென்றுள்ளது.

இதில் நேற்று நடைபெற்ற ஸ்குவாஷ் போட்டியின் ஆடவர் ஒற்றையர் பிரிவு காலிறுதிக்கு முந்தைய சுற்றில் உலகின் 15-ம் நிலை வீரரான இந்தியாவின் சவுரவ் கோசல் உலகின் 62-ம் நிலை வீரரான கனடாவின் டேவிட் பெய்லார்ஜனை எதிர்கொண்டார். இந்த போட்டியில் சவுரவ் கோசல் 3-0 (11-6, 11-2, 11-6) என்ற கணக்கில் வெற்றி பெற்றார். இதன் மூலம் அவர் காலிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளார்.

ஸ்குவாஷ் ஆடவர் ஒற்றையர் பிரிவு காலிறுதிச் சுற்றில் சவுரவ் கோசல், உலகின் 34ம் நிலை வீரரான ஸ்காட்லாந்தின் கிரெக் லோபனை எதிர்கொள்கிறார்.

முன்னதாக நடைபெற்ற ஸ்குவாஷ் போட்டியின் மகளிர் ஒற்றையர் பிரிவு காலிறுதிக்கு முந்தைய சுற்றில் இந்தியாவின் ஜோஷ்னா சின்னப்பா நியூசிலாந்தின் கேட்லின் வாட்ஸை எதிர்கொண்டார். இந்த போட்டியில் ஜோஷ்னா சின்னப்பா 11-8, 9-11, 11-4, 11-6 என்ற கணக்கில் வெற்றி பெற்றார். இதன் மூலம் அவர் காலிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளார். ஸ்குவாஷ் மகளிர் ஒற்றையர் பிரிவு காலிறுதிச் சுற்றில் ஜோஷ்னா கனடாவின் ஹோலி நாட்டனை எதிர்கொள்கிறார்.


Next Story