டென்மார்க் ஓபன் பேட்மிண்டன்: முதல் சுற்றில் சிந்து வெற்றி


டென்மார்க் ஓபன் பேட்மிண்டன்: முதல் சுற்றில் சிந்து வெற்றி
x

டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் போட்டியில் முதல் சுற்றில் சிந்து வெற்றிபெற்றுள்ளார்.

ஓடென்ஸ்,

டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் போட்டி ஓடென்ஸ் நகரில் நேற்று தொடங்கியது. பெண்கள் ஒற்றையர் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னாள் உலக சாம்பியனான இந்தியாவின் பி.வி.சிந்து 21-14, 18-21, 21-10 என்ற செட் கணக்கில் கிர்ஸ்டி கில்மோரை (ஸ்காட்லாந்து) தோற்கடித்தார். வெற்றிக்காக 56 நிமிடங்கள் போராடிய சிந்து 2-வது சுற்றில் கிரிகோரியா மரிஸ்கா துன்ஜங்குடன் (இந்தோனேசியா) மோதுகிறார். ஆகர்ஷி காஷ்யப் (இந்தியா), முன்னாள் ஒலிம்பிக் சாம்பியன் கரோலினா மரின் (ஸ்பெயின்) ஆகியோரும் தங்களது ஆட்டங்களில் வெற்றி பெற்றனர்.

ஆண்கள் பிரிவில் முன்னாள் 'நம்பர் ஒன்' வீரரான இந்தியாவின் ஸ்ரீகாந்த் 21-19, 10-21, 16-21 என்ற செட் கணக்கில் வெங் ஹாங் யாங்கிடம் (சீனா) பணிந்தார். இதே போல் இந்திய இளம் வீரர் லக்ஷயா சென்னும் முதல் சுற்றுடன் நடையை கட்டினார். அவரை 21-16, 21-18 என்ற நேர் செட்டில் வாங்சரியோன் (தாய்லாந்து) வீழ்த்தினார்.

இரட்டையர் பிரிவில் 'நம்பர் ஒன்' ஜோடியான இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ் ரங்கி ரெட்டி- சிராக் ஷெட்டி ஜோடி கடைசி நேரத்தில் விலகியதால் அவர்களை எதிர்த்து ஆட இருந்த மலேசியாவின் ஒங் யேவ் சின்- தியோ இ யி இணை வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.


Next Story