சிந்து, ஸ்ரீகாந்த் உள்ளிட்டோர் பங்கேற்கும் ஆசிய பேட்மிண்டன் போட்டி தொடங்கியது


சிந்து, ஸ்ரீகாந்த் உள்ளிட்டோர் பங்கேற்கும் ஆசிய பேட்மிண்டன் போட்டி தொடங்கியது
x

கோப்புப்படம் 

முன்னணி வீரர், வீராங்கனைகளுக்குரிய பிரதான சுற்று ஆட்டங்கள் இன்று தொடங்குகிறது.

துபாய்,

40-வது ஆசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி துபாயில் நேற்று தொடங்கியது. முதல் நாளில் தகுதி சுற்று ஆட்டங்கள் நடந்தன. முன்னணி வீரர், வீராங்கனைகளுக்குரிய பிரதான சுற்று ஆட்டங்கள் இன்று தொடங்குகிறது.

30-ந் தேதி வரை நடைபெறும் இந்த போட்டியில் பெண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றில் இந்திய முன்னணி வீராங்கனை பி.வி.சிந்து, சீன தைபேயின் வென்சி ஹூவுடன் மோதுகிறார். மற்ற இந்திய வீராங்கனைகள் மால்விகா பான்சோத், கடந்த ஆண்டு இறுதிப்போட்டிக்கு முன்னேறிய அகானே யமாக்குச்சியையும் (ஜப்பான்), ஆகார்ஷி காஷ்யப், இந்தோனேஷியாவின் கோமங் அயுவையும் சந்திக்கின்றனர்.

ஆண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்று ஆட்டத்தில் இந்திய வீரர்கள் எச்.எஸ்.பிரனாய், போன் பியா நைங்கையும் (மியான்மர்), ஸ்ரீகாந்த், அட்னன் இப்ராகிமையும் (பக்ரைன்), லக்ஷயா சென், முன்னாள் உலக சாம்பியன் லோக் கியான் யிவையும் (சிங்கப்பூர்) எதிர்கொள்கின்றனர்.

இதே போல் ஆண்கள் இரட்டையர் பிரிவில் சாத்விக் சாய்ராஜ் ரங்கிரெட்டி- சிராக் ஷெட்டி, எம்.ஆர்.அர்ஜூன்-துருவ் கபிலா, கிருஷ்ண பிரசாத்-விஷ்ணுவர்தன் கவுட், பெண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் திரிஷா ஜாலி-காயத்ரி, அஸ்வினி பாட்-ஷிகா கவுதம், ஹரிதா மனாஜில்-அஷ்னா ராய் ஆகிய இந்திய ஜோடிகளும் களம் இறங்குகின்றன.


Next Story