இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தேர்தல் தேதி அறிவிப்பு


இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தேர்தல் தேதி அறிவிப்பு
x

இடைக்கால தடையை உச்ச நீதிமன்றம் நீக்கியதையடுத்து தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

புதுடெல்லி:

இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது, மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் குற்றச்சாட்டுகள் கூறியதுடன், அவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி டெல்லியில் இரண்டு மாதங்களுக்கும் மேலாக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பிரிஜ் பூஷன் தலைமையிலான மல்யுத்த கூட்டமைப்பை விளையாட்டு அமைச்சகம் சஸ்பெண்ட் செய்தது. அதன்பின் மல்யுத்த கூட்டமைப்பை நிர்வகிக்க பூபேந்தர் சிங் தலைமையில் அடாக் கமிட்டியை இந்திய ஒலிம்பிக் சங்கம் நியமித்தது.

இதற்கிடையே இந்திய மல்யுத்த கூட்டமைப்பு தேர்தலுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. ஆகஸ்ட் 12ம் தேதி வாக்குப்பதிவு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இதற்கான வேட்பாளர்கள் பட்டியலும் தயாரானது. ஆனால், வாக்குப்பதிவுக்கு முந்தைய நாள் பஞ்சாப் மற்றும் அரியானா உயர் நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்தது. அதன்பின் இடைக்கால தடையை உச்ச நீதிமன்றம் நீக்கியதையடுத்து தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

இந்நிலையில், இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தேர்தல் வரும் 21ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தேர்தல் அதிகாரி எம்எம் குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், வேட்பாளர் இறுதிப் பட்டியலை வெளியிடும் அனைத்து நடவடிக்கைகளும் நிறைவடைந்துவிட்ட நிலையில், இனி வாக்குப்பதிவு, வாக்கு எண்ணிக்கை மற்றும் முடிவுகளை அறிவிக்கும் பணிகள் மட்டும் உள்ளன என தெரிவித்துள்ளார்.

21ம் தேதி வாக்குப்பதிவு முடிந்ததும் வாக்கு எண்ணிக்கை நடத்தி முடிவுகளை அறிவிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனினும், தேர்தல் முடிவுகளை வெளியிடுவது பஞ்சாப் மற்றும் அரியானா உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கின் தீர்ப்பிற்கு உட்பட்டது என்றும் தேர்தல் அதிகாரி கூறியுள்ளார்.


Next Story