ஆசிய விளையாட்டு போட்டிக்கான இந்திய மல்யுத்த அணி தேர்வு வருகிற 20-ந் தேதி நடைபெறும் என தகவல்


ஆசிய விளையாட்டு போட்டிக்கான இந்திய மல்யுத்த அணி தேர்வு வருகிற 20-ந் தேதி நடைபெறும் என தகவல்
x
கோப்புப்படம்

ஆசிய விளையாட்டு போட்டிக்கான இந்திய மல்யுத்த அணி தேர்வு வருகிற 20-ந் தேதி நடைபெறும் என்று தகவல் வெளியாகி உள்ளது.

புதுடெல்லி,

19-வது ஆசிய விளையாட்டு போட்டி சீனாவில் செப்டம்பர் 23-ந் தேதி தொடங்குகிறது. இந்த போட்டிக்கான இந்திய மல்யுத்த அணியின் பட்டியலை வருகிற 15-ந் தேதிக்குள் சமர்பிக்க வேண்டும் என்று ஆசிய ஒலிம்பிக் கவுன்சில் ஏற்கனவே கெடு விதித்து இருந்தது.

ஆனால் போராட்டத்தில் ஈடுபட்ட மல்யுத்த வீரர், வீராங்கனைகள் அணி தேர்வுக்கு தயாராக தங்களுக்கு குறிப்பிட்ட கால அவகாசம் அளிக்க வேண்டும் என்று மல்யுத்த சம்மேளனத்தை நிர்வகிக்கும் இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் இடைக்கால கமிட்டிக்கு கோரிக்கை விடுத்து இருந்தனர்.

இதனை ஏற்றுக்கொண்ட இந்திய ஒலிம்பிக் சங்க இடைக்கால கமிட்டி, இந்திய மல்யுத்த அணியின் பட்டியலை சமர்பிக்கும் காலக்கெடுவை நீட்டிக்க வேண்டும் என்று ஆசிய ஒலிம்பிக் கவுன்சிலை கேட்டுக் கொண்டிருந்தது. இதைத்தொடர்ந்து இந்திய மல்யுத்த அணி பட்டியலை சமர்ப்பிக்கும் காலக்கெடுவை தளர்த்த ஆசிய ஒலிம்பிக் கவுன்சில் முடிவு செய்துள்ளது.

இது குறித்து இன்னும் அதிகாரபூர்வாக தகவல் வெளியாகவில்லை என்றாலும் இந்திய மல்யுத்த அணி தேர்வு வருகிற 20-ந் தேதி நடைபெறும் என்று தெரிகிறது.


Next Story