மலோர்கா ஓபன் டென்னிஸ்: இந்தியாவின் பாம்ப்ரி ஜோடி சாம்பியன்


மலோர்கா ஓபன் டென்னிஸ்: இந்தியாவின் பாம்ப்ரி ஜோடி சாம்பியன்
x

மலோர்கா ஓபன் டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் பாம்ப்ரி ஜோடி சாம்பியன் பட்டம் வென்று உள்ளது.

மலோர்கா,

மலோர்கா ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி ஸ்பெயின் நாட்டில் நடந்தது. இதன் ஆண்கள் இரட்டையர் இறுதி ஆட்டத்தில் இந்தியாவின் யுகி பாம்ப்ரி, தென்ஆப்பிரிக்காவின் லாய்ட் ஹாரிஸ் ஜோடி, ராபின் ஹாஸ் (நெதர்லாந்து)- பிலிப் ஆஸ்வால்ட் (ஆஸ்திரியா) இணையை எதிர்கொண்டது.

விறுவிறுப்பான இந்த மோதலில் யுகி பாம்ப்ரி ஜோடி 6-3, 6-4 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று சாம்பியன் கோப்பையை தட்டி சென்றது. டெல்லியை சேர்ந்த 30 வயதான யுகி பாம்ப்ரி ஏ.டி.பி. சர்வதேச டென்னிசில் கைப்பற்றிய முதல் பட்டம் இதுவாகும்.

பின்னர் யுகி பாம்ப்ரி கூறுகையில், 'புல்தரை மைதானத்தில் பெற்ற நம்ப முடியாத வெற்றி இது. அதுவும் தொடர் முழுவதும் ஒரு செட் கூட விட்டுக்கொடுக்காமல் புல்தரை போட்டியில் வெல்வது எளிதான விஷயமல்ல. ஒற்றையர் பிரிவிலும் சிறப்பாக செயல்பட்ட ஹாரிஸ் வெற்றிக்கு மிகவும் உதவிகரமாக இருந்தார். மேலும் பல பட்டங்களை வெல்வேன் என்று நம்புகிறேன்' என்றார்.


Next Story