செல்பி எடுக்க வந்தவருடன் காதல்...! பிரபல டென்னிஸ் வீராங்கனையின் காதல் கதை...!!


செல்பி எடுக்க வந்தவருடன் காதல்...! பிரபல டென்னிஸ் வீராங்கனையின் காதல் கதை...!!
x

ஸ்பெயின் வீராங்கனை கார்பின் முகுருசா கடந்த 2016-ம் ஆண்டு பிரெஞ்ச் ஓபன் மற்றும் 2017-ம் ஆண்டு விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் சாம்பியன் பட்டம் வென்று உள்ளார்.

பிரபல டென்னிஸ் நட்சத்திரமும், முன்னாள் பிரெஞ்ச் ஓபன் மற்றும் விம்பிள்டன் சாம்பியனுமான கார்பின் முகுருசா.தன்னிடம் செல்பி எடுக்க வந்த ரசிகரையே காதலித்து, தற்போது திருமணம் செய்ய முடிவு செய்துள்ளார்.

உலகப் புகழ்பெற்ற டென்னிஸ் வீராங்கனை கார்பின் முகுருசா. ஸ்பெயின் நாட்டு வீராங்கனையான இவர் கடந்த 2016-ம் ஆண்டு பிரெஞ்ச் ஓபன் மற்றும் 2017-ம் ஆண்டு விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் சாம்பியன் பட்டம் வென்று உள்ளார்.

குறிப்பாக அந்த சமயம் விம்பிள்டனை வென்ற பிறகு முதல்முறையாக உலகின் நம்பர்-1 வீராங்கனையாக உருவெடுத்தார். இருப்பினும் சமீபகாலமாக இவரது விளையாட்டில் சில தடுமாற்றங்கள் இருந்து வந்தாலும், தனது வாழ்க்கை துணையை தேர்ந்தெடுப்பதில் மட்டும் எந்த ஒரு தடுமாற்றமும் இல்லாமல் ஒரு தெளிவான முடிவை எடுத்துள்ளார்.

அதுவும் தன்னிடம் செல்பி எடுக்க வந்த ரசிகரையே அவர் காதலித்து தற்போது திருமணம் செய்கிறார் என்பதுதான் இதில் சுவாரசியம்.

தனது காதல் கதை குறித்து கார்பின் முகுருசா கூறியதாவது:-

"கடந்த 2021 ஆம் ஆண்டு அமெரிக்க ஓபன் போட்டியில் விளையாடுவதற்காக அமெரிக்கா சென்றிருந்தேன். அப்போது நியூயார்க்கில் உள்ள சென்ட்ரல் பார்க் அருகே தான் நான் தங்கி இருந்த ஓட்டல் இருந்தது.

ஒரு நாள் மதியம் ஓட்டலில் நான் மிகவும் களைப்பாக இருந்ததால், சிறிது தூரம் நடக்கலாம் என முடிவு செய்து சாலையில் இறங்கி அருகில் உள்ள பூங்காவில் நடந்து சென்றேன். அப்போது திடீரென அங்கு வந்த ஆர்தர் போர்ஜஸ் என்னிடம் செல்பி கேட்டு எடுத்துக்கொண்டு, போட்டிக்கு வாழ்த்து சொல்லிவிட்டு கிளம்பிவிட்டார்.

அந்த சமயம் எனக்கு 'அட எவ்வளவு அழகா இருக்கான் இந்த பையன்' என தோன்றியதோடு, எனது மனதில் காதல் பட்டாம்பூச்சிகளும் பறந்தன. அப்போது ஆர்தர் போர்ஜஸ் நியூயார்க்கில் பிரபலமான டாம் போர்டு பிராண்டில் பணிபுரிந்து வந்தார்.

நானோ உலகின் நம்பர்-3 டென்னிஸ் வீராங்கனையாக இருந்து வந்தேன். இருப்பினும் எங்களுக்கு இடையேயான சந்திப்பு மீண்டும் மீண்டும் நிகழ்ந்து.

ஒரு தருணத்தில் அவர் காதலை வெளிப்படுத்தினார். அப்போது நான் எதையோ யோசனை செய்து கொண்டு இருந்தேன். எனக்கு என்ன பதில் சொல்வது என தெரியவில்லை. எனக்கு அழுகை வந்து விட்டது. நான் கண்ணீருடன் ஆம் என்றேன். அந்த தருணம் மிகவும் ரொமான்டிக்காக இருந்தது.

திருமண தேதி இன்னும் முடிவு செய்யப்படவில்லை. இருப்பினும் கடற்கரையை ஒட்டி தான் திருமணம் செய்து கொள்ள விரும்புவதாக" அவர் கூறி உள்ளார்.




Next Story