ஐபிஎல் கிரிக்கெட் : லக்னோ அணிக்கு 150 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது டெல்லி அணி


Image Courtesy : @IPL
x
Image Courtesy : @IPL
தினத்தந்தி 7 April 2022 3:46 PM GMT (Updated: 7 April 2022 3:46 PM GMT)

டெல்லி அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 149 ரன்கள் குவித்தது.

மும்பை,

ஐ.பி.எல். தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் - டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன.

இந்த போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணியின் கேப்டன் கேஎல் ராகுல் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் டெல்லி அணி பேட்டிங் செய்ய களமிறங்கியது.

அணியின் தொடக்க வீரர்களாக டேவிட் வார்னர் - பிரித்வி ஷா களமிறங்கினர். தொடக்கம் முதலே அதிரடி காட்டிய பிரித்வி ஷா பவர்பிளே ஓவர்களை சிறப்பாக பயன்படுத்தி ரன்களை குவித்தார்.

லக்னோ பந்துவீச்சாளர்களை துவம்சம் செய்த அவர் அடுத்தடுத்து பவுண்டரிகள் அடித்து அசத்தினார். தொடர்ந்து சிறப்பாக விளையாடிய பிரித்வி ஷா 30 பந்துகளில் அரைசதம் அடித்து அசத்தினார். 

பின்னர் கிருஷ்ணப்பா கெளதம் பந்துவீச்சில் பிரித்வி ஷா ஆட்டமிழந்தார். அவர் 34 பந்துகளில் 61 ரன்கள் குவித்தார். அவரை தொடர்ந்து பவல் 3 ரன்களிலும் வார்னர் 4 ரன்களிலும் வெளியேற டெல்லி அணி தடுமாற தொடங்கியது.

அதன்பிறகு அணியின் கேப்டன் பண்ட் உடன் சர்ப்ராஸ் கான் ஜோடி சேர்ந்தார். 50 ரன்கள் பாட்னர்ஷிப்பை கடந்த இந்த ஜோடி டெல்லி அணியை சரிவில் இருந்து மீட்டனர். பண்ட் 39 ரன்களுடனும் சர்ப்ராஸ் கான் 36 ரன்களுடனும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

இறுதியில் டெல்லி அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 149 ரன்கள் குவித்தது.

இதையடுத்து 150 ரன்கள் எடுத்தால் வெற்றியென்ற இலக்குடன் லக்னோ அணி களமிறங்குகிறது.

Next Story