தமிழில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புகள்


தமிழில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புகள்
x

ஜனநாயகத்தின் 4 தூண்களில் ஒன்றான நீதிமன்றம் நீதியின் கோவிலாகவும், நீதியின் கடவுளாக நீதிபதியும் மக்களால் போற்றி புகழப்படுகிறார்கள்.

ஜனநாயகத்தின் 4 தூண்களில் ஒன்றான நீதிமன்றம் நீதியின் கோவிலாகவும், நீதியின் கடவுளாக நீதிபதியும் மக்களால் போற்றி புகழப்படுகிறார்கள். நீதிமன்றம் என்பது பல அடுக்குகளை கொண்டது. மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு, சப்- கோர்ட்டு, கூடுதல் செசன்சு கோர்ட்டு, மாவட்ட நீதிமன்றம், ஐகோர்ட்டு, சுப்ரீம் கோர்ட்டு என்று பல வரம்புகளில் நீதி விசாரணை செய்யப்பட்டு தீர்ப்புகள் வழங்கப்படுகின்றன. இதில் மாவட்ட நீதிமன்றங்கள் வரை தமிழ் போன்ற பிராந்திய மொழிகள் வழக்காடு மொழிகளாக இருக்கின்றன. அதாவது வக்கீல்கள் தமிழில் வாதாடலாம். தீர்ப்புகளும் தமிழிலும் வழங்கப்படுகின்றன.

ஆனால் ஐகோர்ட்டிலும், சுப்ரீம் கோர்ட்டிலும் வழக்காடு மொழியாக தமிழ் இல்லை. சென்னை ஐகோர்ட்டிலும், மதுரை ஐகோர்ட்டு கிளையிலும் வக்கீல்கள் தமிழில் வாதாட முடியாது. ஆங்கிலத்தில்தான் வாதாட வேண்டும். தீர்ப்புகளும் ஆங்கிலத்திலேயே வழங்கப்படுகிறது. சுப்ரீம் கோர்ட்டிலும் ஆங்கிலம்தான் வழக்காடு மொழியாக இருக்கிறது. சாதாரண பாமர மக்கள் ஐகோர்ட்டுக்கு போனாலும் சுப்ரீம் கோர்ட்டுக்கு போனாலும் என்ன நடக்கிறது?, தன் வழக்கில் வாதங்கள் எந்த திசையில் போகிறது?, நீதிபதி என்ன சொல்கிறார்? தீர்ப்பில் என்ன கூறப்பட்டுள்ளது? என்பதெல்லாம் புரியாமல் ஆங்கிலம் தெரிந்தவர்களிடம் கேட்டுத்தெரிய வேண்டிய நிலை இருக்கிறது.

இந்தநிலையில் சுப்ரீம் கோர்ட்டின் 50-வது தலைமை நீதிபதிக்கு, இன்னும் 2 ஆண்டுகள் பதவிகாலம் இருக்கிறது, சுப்ரீம் கோர்ட்டில் அதிக ஆண்டுகள் தலைமை நீதிபதியாக பதவி வகித்தவர், அதாவது 7 ஆண்டுகள் பதவி வகித்தவர் என்ற பெருமைக்கு சொந்தக்காரரான நீதிபதி ஒய்.வி.சந்திரசூட்டின் மகனான தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், மும்பையில் நடந்த மராட்டியம் மற்றும் கோவா பார் கவுன்சில் கூட்டத்தில் பேசும்போது, சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புகள் அனைத்தும் பிராந்திய மொழிகளில் வழங்கப்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி பேசினார். இதற்கு தகவல் தொழில்நுட்ப வசதிகளை பயன்படுத்தலாம் என்று ஆலோசனை கூறினார். இந்த தொழில்நுட்பம் நீதிமன்றங்களோடு உள்ள அணுகுமுறைக்கான இடைவெளியை குறைக்கும் என்றும் குறிப்பிட்டார்.

அப்போது அவரது பேச்சு எல்லோருக்கும் போய் சென்றடையவில்லை. ஆனால் அடுத்த நாளே பிரதமர் நரேந்திரமோடி தன் 'டுவிட்டர்' பதிவில் இதற்கு வரவேற்பு தெரிவித்தவுடன், நாட்டில் உள்ள அனைவருக்கும் தெரியவந்தது. தலைமை நீதிபதியின் கருத்து பாராட்டுக்குரியது. இது பலருக்கு குறிப்பாக இளைஞர்களுக்கு பெரும்பயன் அளிக்கும் என்று பிரதமர் நரேந்திரமோடி குறிப்பிட்டு இருந்தார். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினும், 'தலைமை நீதிபதியின் இந்த கருத்தை முழுமனதாக வரவேற்கிறேன். இதனோடு ஐகோர்ட்டுகளில் மாநில அலுவல்மொழிகளை வழக்காடு மொழியாக்க வேண்டும் என்ற நமது நீண்ட நாள் கோரிக்கையையும் நிறைவேற்றுவது, நீதியை நாட்டின் சாமானிய மக்களுக்கு அருகில் கொண்டு செல்லும்', என்று கருத்து தெரிவித்திருந்தார்.

தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் சொன்னதோடு நிற்காமல், குடியரசு தினம் முதல் தமிழ் உள்பட 13 மாநில மொழிகளில் 1,268 தீர்ப்புகளை பார்க்கும் வசதியை ஏற்படுத்திக் கொடுத்துள்ளார். ஜனவரி 1-ந்தேதி வரையிலான தீர்ப்புகளை மாநில மொழிகளில் பார்க்கலாம். இது மிகவும் வரவேற்புக்குரியது. இதுபோல சென்னை ஐகோர்ட்டில் தமிழ் வழக்குமொழியாக இருக்க வேண்டும் என்ற நீண்டகால கோரிக்கையையும், சுப்ரீம் கோர்ட்டின் கிளையை தமிழ்நாட்டில் தொடங்க வேண்டும் என்ற கோரிக்கையையும் சுப்ரீம்கோர்ட்டும், மத்திய அரசாங்கமும் நிறைவேற்ற வேண்டும்.


Next Story