குஜராத்தில் டேங்கர் லாரி மீது கார் மோதி விபத்து: 10 பேர் பலி

கார் விபத்து காரணமாக அகமதாபாத் - வதோதரா விரைவு சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

Update: 2024-04-17 13:27 GMT

அகமதாபாத்,

குஜராத் மாநிலத்தில் டேங்கர் லாரியின் பின்புறம் கார் மோதிய விபத்தில் 10 பேர் உயிரிழந்தனர். குஜராத் மாநிலம், கேடா மாவட்டத்தில் அகமதாபாத் - வதோதரா நெடுஞ்சாலையில் நதியாட் பகுதியில் நின்று கொண்டிருந்த டேங்கர் லாரி பின்புறத்தில் கார் பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் 8 பேர் சம்பவ இடத்திலும், 2 பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலும் உயிரிழந்தனர்.

இதுகுறித்து தகவலறிந்த உள்ளூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் 2 ஆம்புலன்ஸ் வாகனங்களும் அங்கு வரவழைக்கப்பட்டு, உயிரிழந்தவர்களின் சடலங்கள், பிரேத பரிசோதனைக்கு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டன. விபத்தில் சிக்கிய கார் அப்பளம் போல் நொறுங்கி காட்சி அளித்தது.

போலீசாரின் முதல்கட்ட விசாரணையில், விபத்திற்குள்ளான கார், வதோதராவிலிருந்து அகமதாபாத் நோக்கி வந்தபோது இந்த விபத்தில் சிக்கியது தெரியவந்தது. இந்த விபத்து காரணமாக அகமதாபாத் - வதோதரா விரைவு சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணையை நடத்தி வருகின்றனர். சாலை விபத்தில் 10 பேர் உயிரிழந்த சம்பவம் குஜராத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்