இந்தியாவில் கொரோனா பாதிப்பு; பலி எண்ணிக்கை 3,867 ஆக உயர்வு

இந்தியாவில் கொரோனா பாதிப்புக்கு பலி எண்ணிக்கை 3,867 ஆக இன்று உயர்வடைந்து உள்ளது.

Update: 2020-05-24 05:08 GMT
புதுடெல்லி,

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் நாள்தோறும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.  அதனை தடுக்கும் நடவடிக்கைகளில் மத்திய மற்றும் மாநில அரசுகள் தீவிரமுடன் ஈடுபட்டு வருகின்றன.  நாட்டில் ஊரடங்கு அமலில் இருந்தபொழுதும், பொதுமக்கள் அளிக்கும் ஒத்துழைப்புக்கு ஏற்பவே கொரோனா பரவல் கட்டுக்குள் வரும் என்று அரசு தொடர்ந்து கூறி வருகிறது.

இந்த நிலையில், மத்திய சுகாதார மற்றும் குடும்பநல அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள செய்தியில், நாட்டில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு பலி எண்ணிக்கை 3,867 ஆக உயர்வடைந்துள்ளது.  54 ஆயிரத்து 441 பேர் குணமடைந்தும், 73 ஆயிரத்து 560 பேர் தொடர் சிகிச்சையிலும் உள்ளனர் என தெரிவித்துள்ளது.  இதனால் இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 1 லட்சத்து 31 ஆயிரத்து 868 ஆக உயர்வடைந்து உள்ளது.

கடந்த 1ந்தேதி இந்தியாவில் கொரோனாவுக்கு பலி எண்ணிக்கை 1,147 ஆக இருந்தது.  இதேபோன்று, கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 33 ஆயிரத்து 50 ஆக இருந்தது.  கடந்த 24 நாட்களில், இந்த பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கை மூன்று மடங்காக அதிரடியாக உயர்ந்து உள்ளது.  இதேபோன்று சீனாவில் 82 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு பாதிப்பு உறுதியான நிலையில், இந்தியா இந்த எண்ணிக்கையை கடந்து சென்று உள்ளது.  ஈரான் நாட்டு எண்ணிக்கையை நெருங்கி சென்று கொண்டிருக்கிறது.

மேலும் செய்திகள்