சாலையோர வியாபாரிகளுடன் கலந்துரையாடிய பிரதமர் மோடி

சாலையோர வியாபாரிகளுடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார்.

Update: 2020-09-09 23:45 GMT
போபால், 

கொரோனா வைரஸ் பெருந்தொற்று நோயால், வியாபாரம் பாதிப்பு அடைந்துள்ள சாலையோர வியாபாரிகளுக்கும், தெரு வியாபாரிகளுக்கும் மத்திய அரசு பி.எம்.ஸ்வாநிதி (சாலையோர வியாபாரிகள் சுய சார்பு நிதி திட்டம்) என்ற பெயரில் கடன்கள் வழங்கும் திட்டத்தை கடந்த ஜூன் மாதம் 1-ந் தேதி தொடங்கியது.

உத்தரவாதம் இன்றி குறைந்த வட்டிக்கு இந்த திட்டத்தின் கீழ் கடன் உதவி பெற்ற மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்த தெரு வியாபாரிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி, டெல்லியில் இருந்தவாறு நேற்று காணொலி காட்சி வழியாக கலந்துரையாடினார்.

இந்தூர் மாவட்டம், சன்வர் நகரை சேர்ந்த தெரு வியாபாரி சாகன் லாலுடன் பேசும்போது, துடைப்பம் தயாரிப்பதற்கான செலவை குறைப்பதற்கு விளக்குமாறு தயாரிப்பதில் பயன்படுத்தப்படும் குழாயை (கைப்பிடி) திருப்பித்தருமாறு வாடிக்கையாளர்களிடம் கேட்கலாம். இதன்மூலம் வியாபாரத்தை மேம்படுத்த முடியும் என யோசனை கூறினார். சாகன்லால், தனது வியாபாரத்தை மேம்படுத்த விரும்புவதாக பிரதமர் மோடியிடம் தெரிவித்தார்.

சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்கு, குடிநீருக்காக ஒரு நேரம் பயன்படுத்தி விட்டு விட்டெறிந்து விடுகிற பிளாஸ்டிக் பாட்டில்களை பயன்படுத்துவதற்கு பதிலாக மண்பானையை உபயோகிக்குமாறு மோடி, அவருக்கு ஆலோசனை வழங்கினார்.

குவாலியரில் தெருவில் உணவு வியாபாரம் செய்கிற அர்ச்சனா சர்மாவுடனும் பிரதமர் மோடி கலந்துரையாடினார். அப்போது அந்த பெண் விற்பனை செய்யும் ‘டிக்கி’யை (தின்பண்டம்) தனக்கும் வழங்குவாரா என கேட்டார்.

ரைசன் மாவட்டம், சாஞ்சியை சேர்ந்த காய்கறி வியாபாரி தல்சந்த் என்பவருடனும் பிரதமர் மோடி கலந்துரையாடினார். அவர் காய்கறிகளுக்கு விலையாக பணத்தை ரொக்கமாக பெறுவதற்கு பதிலாக ‘கியுஆர் கோட்’ டிஜிட்டல் தளத்தை பயன்படுத்துவதை அறிந்து பாராட்டு தெரிவித்தார்.

அதைத் தொடர்ந்து காணொலி காட்சி வழியாக பிரதமர் மோடி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

தெருக்களில் உணவுகளை விற்பனை செய்கிறவர்களுக்கும், தொழில் நுட்பத்தை பயன்படுத்தி ஆன்லைனில் விற்பனை தளத்தை வழங்க ஒரு திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் பெரிய ஓட்டல்கள் போல, தெரு உணவு வியாபாரிகளும் ஆன்லைன் வழியாக உணவுகளை வினியோகம் செய்ய முடியும். இந்த வசதியை வழங்குவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதில் தெரு வியாபாரிகள் முன்வந்தால், அரசு இந்த முயற்சியை மேலும் தீவிரமாக்கும். பெரிய அளவில் தெரு வியாபாரிகள், ஆன்லைன் கட்டண முறையை பின்பற்ற வேண்டும்.

தெரு வியாபாரிகள், டிஜிட்டல் பண தளத்தை அதிகளவில் பயன்படுத்தி, உலகிற்கு ஒரு முன் உதாரணமாக விளங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்