கர்நாடகத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தும் திட்டமில்லை - முதல்வர் எடியூரப்பா

கர்நாடக மாநிலத்தில் மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தும் திட்டம் எதுவும் இல்லை என அந்த மாநிலத்தின் முதல்வர் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.

Update: 2021-04-15 10:08 GMT
பெங்களூரு,

நாடு முழுவதும் கொரோனா தொற்றின் 2வது அலை மிகத் தீவிரமாக பரவி வருகிறது. இதனால் அனைத்து மாநிலங்களிலும் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிக அளவில் பதிவாகி வருகிறது. இதனை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளன.

அந்த வகையில் கர்நாடக மாநிலத்திலும் கொரோனா பரவல் வேகமாக அதிகரித்து வருகிறது. தலைநகர் பெங்களூரு உள்பட 8 நகரங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் கர்நாடகத்தில் இடைத்தேர்தல் முடிவடைந்ததும் ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று தகவல் வெளியானது.

இதை முதல்-மந்திரி எடியூரப்பா முற்றிலுமாக மறுத்துள்ளார். அம்பேத்கர் ஜெயந்தியை முன்னிட்டு பெங்களூரு விதான சவுதா வளாகத்தில் உள்ள அம்பேத்கரின் சிலைக்கு முதல்-மந்திரி எடியூரப்பா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதன் பிறகு அவர் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

“கர்நாடகத்தில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க தீவிரமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. பெங்களூரு உள்பட 8 நகரங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தேவைப்பட்டால் இன்னும் சில நகரங்களுக்கு இந்த இரவு நேர ஊரடங்கு விஸ்தரிக்கப்படும். ஆனால் எக்காரணம் கொண்டும் கர்நாடகத்தில் மீண்டும் முழு ஊரடங்கை அமல்படுத்தும் திட்டம் இல்லை. அதுகுறித்து அரசு யோசிக்கவே இல்லை” என்று தெரிவித்தார்.

மேலும் செய்திகள்