முன்னாள் மந்திரி அனில் தேஷ்முக்கிற்கு 3-வது முறையாக சம்மன்; அமலாக்கத்துறை நடவடிக்கை

சட்டவிரோத பணபரிமாற்ற வழக்கில் அனில் தேஷ்முக்கிற்கு 3-வது முறையாக சம்மன் அனுப்பி அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

Update: 2021-07-03 19:37 GMT
சட்டவிரோத பணபரிமாற்றம்
ஓட்டல், மதுபான விடுதிகளிடம் இருந்து மாதம் ரூ.100 கோடி மாமூல் வசூலித்து தரும்படி மும்பை போலீசாரை உள்துறை மந்திரியாக இருந்த அனில் தேஷ்முக் கட்டாயப்படுத்தினார் என்று, வெடிகுண்டு கார் விவகாரத்தில் இடமாற்றம் செய்யப்பட்ட மும்பை போலீஸ் கமிஷனர் பரம்பீர் சிங் பரபரப்பு குற்றம் சாட்டினார். இது தொடர்பாக சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்து விசாரணை 
நடத்தியது. அதன் அடிப்படையாக கொண்டு அமலாக்கத்துறையும் அனில் தேஷ்முக் வீடுகளில் அதிரடி சோதனை நடத்தியது. அப்போது சட்டவிரோத பணபரிமாற்றம் நடைபெற்றது தெரியவந்தது. இதையடுத்து சமீபத்தில் அவரது உதவியாளர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

3-வது முறையாக சம்மன்
இந்த நிலையில் அனில் தேஷ்முக்கிற்கு 2 தடவை சம்மன் அனுப்பியும் அவர் அமலாக்கத்துறை முன் ஆஜராகவில்லை. கணொலி காட்சி மூலம் ஆஜராக அனுமதி அளிக்கம்படி அவர் கோரி உள்ளார். ஆனால் அவரது கோரிக்கையை அமலாக்கத்துறை நிராகரித்ததோடு, நாளை (திங்கட்கிழமை) நேரில் ஆஜராக வேண்டும் என்று 3-வது தடவையாக அனில் தேஷ்முக்கிற்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி உள்ளது.

மும்பையை சேர்ந்த 10 மதுபான பார் உரிமையாளர்கள் ரூ.4 கோடி வரை அனில் தேஷ்முக்கிற்கு மாமூல் கொடுத்ததாக அமலாக்கத்துறையில் வாக்குமூலம் அளித்து உள்ளனர். இதில் நடந்த சட்டவிரோத பணபரிமாற்றத்தை முக்கிய ஆதாரமாக வைத்து கொண்டு அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்