நான் கூறியது குண்டர்களை, விவசாயிகளை அல்ல - மீனாட்சி லேகி மறுப்பு
நான் கூறியது குண்டர்களை, விவசாயிகளை அல்ல என மத்திய மந்திரி மீனாட்சி லேகி கூறியுள்ளார்.
புதுடெல்லி,
மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் கடந்த நவம்பர் மாதம் முதல் போராட்டங்கள் நடந்து வருகிறது. பஞ்சாப், அரியானா, உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் டெல்லி ஜந்தர் மந்திரில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இதனிடையே டெல்லியில் போராடுபவர்கள் விவசாயிகள் அல்ல, அவர்கள் குண்டர்கள் என்று மத்திய மந்திரி மீனாட்சி லேகி பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதற்கு மறுப்பு தெரிவித்த அவர், இன்று ஒரு பத்திரிகையாளர்கள் சந்திப்பின் போது, ஜனவரி 26 அன்று செங்கோட்டை வன்முறை மற்றும் ஒரு ஊடக நபர் மீது (இன்று உழவர் நாடாளுமன்றத்தில்) தாக்குதல் குறித்து எனது கருத்து கோரப்பட்டது.
அதற்கு பதிலளிக்கும் விதமாக, குண்டர்கள் மட்டுமே, விவசாயிகளால் இதுபோன்ற செயல்களில் ஈடுபட மட்டார்கள் என்று நான் சொன்னேன்.
எனது அறிக்கை தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. ஆயினும்கூட, விவசாயிகளுடன் தொடர்புபடுத்தப்பட்ட எனது கருத்துக்கள் யாரையும் புண்படுத்தியிருந்தால், நான் என் வார்த்தைகளை திரும்ப பெற்றுக்கொள்கிறேன் என்றார்.