ஒடிசாவில் படகு கவிழ்ந்து விபத்து - ஒரு பெண் உயிரிழப்பு, 7 பேர் மாயம்

படகு கவிந்த விபத்தில் ஒரு பெண் உயிரிழந்த நிலையில், 3 குழந்தைகள் உள்பட 7 பேர் மாயமாகியுள்ளனர்.

Update: 2024-04-20 02:42 GMT

புவனேஸ்வர்,

ஒடிசா மாநிலம் ஜர்சுகுடா மாவட்டத்தில் உள்ள மகாநதி ஆற்றில் சுமார் 50-க்கும் அதிகமானோரை ஏற்றிக் கொண்டு சென்ற படகு ஒன்று எதிர்பாராத விதமாக ஆற்றில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. இந்த சம்பவம் தொடர்பாக தகவலறிந்து மாநில பேரிடர் மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணிகளில் ஈடுபட்டனர்.

இந்த விபத்தில் 35 வயது பெண் ஒருவர் உயிரிழந்தார். மேலும் 3 குழந்தைகள் உள்பட 7 பேர் மாயமாகியுள்ளனர். அவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதுவரை சுமார் 40 பேர் மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மாவட்ட கலெக்டர் கார்த்திகேயா கோயல், சம்பவ இடத்திற்கு நேரில் சென்று மீட்பு பணிகளை ஆய்வு செய்தார். மீட்பு பணிகளில் உதவுவதற்காக புவனேஸ்வரில் இருந்து ஸ்கூபா நீச்சல் வீரர்கள் வரவழைக்கப்பட உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்