குஜராத்தில் ரூ.7.70 கோடி கிரிப்டோகரன்சி பறிமுதல் - சி.பி.ஐ. அதிரடி

குஜராத்தில் ரூ.7.70 கோடி மதிப்புள்ள கிரிப்டோகரன்சிகளை சி.பி.ஐ. அதிரடி பறிமுதல் செய்தது.

Update: 2023-10-21 22:29 GMT

கோப்புப்படம்

புதுடெல்லி,

குஜராத் மாநிலம் ஆமதாபாத் நகரை சேர்ந்த ரமாவத் ஷைஷவ் என்பவர் தன்னை பன்னாட்டு நிறுவனத்தின் ஊழியர் என கூறி அமெரிக்காவை சேர்ந்த ஒருவரை ஏமாற்றி பல கோடி பணத்தை சுருட்டியதாக தெரிகிறது. பாதிக்கப்பட்ட அந்த அமெரிக்கர் அந்த நாட்டின் புலனாய்வு அமைப்பான எப்.பி.ஐ.யிடம் புகார் அளித்தார். அதன் பேரில் விசாரணை நடத்திய எப்.பி.ஐ. அதிகாரிகள் இந்த மோசடி குறித்து சி.பி.ஐ.க்கு தகவல் தெரிவித்தனர்.

அதன் பேரில் சி.பி.ஐ. அதிகாரிகள் ரமாவத் ஷைஷவ் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் அவர் மோசடியில் ஈடுபட்டது அம்பலமானது. இதை தொடர்ந்து அவருக்கு சொந்தமான இடங்களில் சி.பி.ஐ. அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர். அப்போது ரமாவத் ஷைஷவ் அமெரிக்கரிடம் இருந்து சுருட்டிய பணத்தை கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்திருப்பது தெரியவந்தது.

அதனை தொடர்ந்து, அவருக்கு சொந்தமான இ-வாலட் எனப்படும் மின்னணு பணப்பையில் இருந்து ரூ.7.70 கோடி மதிப்புள்ள கிரிப்டோ கரன்சிகளை சி.பி.ஐ. அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அந்த கிரிப்டோகரன்சி உடனடியாக அரசின் இ-வாலட்டுக்கு மாற்றப்பட்டது. இது குறித்து சி.பி.ஐ. அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்