குடிபோதையில் தகராறு: காதலியை கொலை செய்த நபர் கைது

குடும்ப பிரச்சினை குறித்து பேசிக்கொண்டிருந்தபோது இருவருக்குள்ளும் தகராறு ஏற்பட்டது.

Update: 2024-04-16 22:58 GMT

மும்பை,

நேபாள நாட்டை சேர்ந்த பெண் ஹேம்குமாரி (வயது30). இவர் மும்பை காந்திவிலி பகுதியில் நோயாளி ஒருவரை பராமரிக்கும் வேலையை செய்து வந்தார். இதில் ஹேம்குமாரிக்கும், அவர் வேலைபார்க்கும் பகுதியில் உள்ள கட்டிடத்தில் காவலாளியாக வேலை பார்க்கும் நேபாளத்தை சேர்ந்த தாம்பர் கட்கேவுக்கும் (33) இடையே பழக்கம் ஏற்பட்டது. 2 பேரும் கட்டிட காவலாளி அறையில் அடிக்கடி சந்தித்து பேசி வந்தனர். சம்பவத்தன்று ஹேம்குமாரியின் பிறந்தநாள். எனவே அவர் காதலன் தாம்பர் கட்கேவுடன் பிறந்தநாளை கொண்டாட விரும்பினார்.

இதற்காக சம்பவத்தன்று இரவு 2 பேரும் காவலாளி அறையில் மதுகுடித்தனர். அப்போது ஹேம்குமாரி தனது குடும்ப பிரச்சினை குறித்து காதலனிடம் கூறினார். அப்போது, 2 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த தாம்பர் கட்கே காதலியின் தலை முடியை பிடித்து இழுத்து சுவரின் மீது பலமாக மோதினார். இதனால் தலையில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், தாம்பர் கட்கேயை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  

Tags:    

மேலும் செய்திகள்