விருத்தாசலம் சிறுவனை கடத்தி கொலை: குற்றவாளியின் தூக்கு தண்டனை ரத்து சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு

சிறுவனை கடத்தி கொலை செய்த வழக்கில் குற்றவாளிக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை ரத்து செய்த சுப்ரீம் கோர்ட்டு, 20 ஆண்டு ஆயுள் தண்டனையாக குறைத்து தீர்ப்பு கூறியுள்ளது.

Update: 2023-03-21 22:45 GMT

புதுடெல்லி, 

சிறுவனை கடத்தி கொலை செய்த வழக்கில் குற்றவாளிக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை ரத்து செய்த சுப்ரீம் கோர்ட்டு, 20 ஆண்டு ஆயுள் தண்டனையாக குறைத்து தீர்ப்பு கூறியுள்ளது.

விருத்தாசலத்தை அடுத்த கார்குடலைச் சேர்ந்த 7 வயது சிறுவன் பணத்துக்காக கடந்த 2007-ஆம் ஆண்டு கடத்தி கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டான். இந்த வழக்கில் குற்றவாளி சுந்தர்ராஜனுக்கு தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பு அளிக்கப்பட்டது. இதை சுப்ரீம் கோர்ட்டும் கடந்த 2013-ம் ஆண்டு உறுதி செய்தது.

தனக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை மறுஆய்வு செய்யக்கோரி சுந்தர்ராஜன் தாக்கல் செய்த மனுவை சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு விசாரித்தது.

அந்த அமர்வு நேற்று கூறிய தீர்ப்பில், சிறுவனை கடத்தி கொலை செய்ததில் சந்தேகம்கொள்ள எவ்வித காரணமும் இல்லை. தூக்கு தண்டனையை ஆய்வு செய்யவேண்டிய முகாந்திரமும் எழவில்லை. இருப்பினும் தூக்கு தண்டனையை 20 ஆண்டு ஆயுள் தண்டனையாக குறைக்கிறோம் என்று தெரிவித்துள்ளனர்.

மேலும், மனுதாரரின் நடத்தையை கோர்ட்டிடம் மறைத்து பிரமாண பத்திரம் தாக்கல் செய்த கடலூர் மாவட்டம் கம்மாபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு எதிராக கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்ய பதிவாளர் அலுவலகத்துக்கு உத்தரவிட்டதோடு, இதற்கு பதில் அளிக்க வேண்டும் எனவும் நீதிபதிகள் தீர்ப்பில் கூறியுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்