மேகதாது அணை விவகாரம் தமிழக தலைவர்கள் அரசியல் ஆக்குகிறார்கள் நாங்கள் சட்ட திட்டங்களை மதிக்கிறோம் கர்நாடக மந்திரி சிவக்குமார் தந்தி டி.வி.க்கு பரபரப்பு பேட்டி

மேகதாது அணை விவகாரத்தில் நாங்கள் சட்ட திட்டங்களை மதித்து நடக்கிறோம் என்று தந்தி டி.வி.க்கு அளித்த சிறப்பு பேட்டியில் கர்நாடக மாநில நீர்ப்பாசன துறை மந்திரி சிவக்குமார் கூறினார்.

Update: 2018-12-19 00:15 GMT
சென்னை,

மேகதாது அணை விவகாரம் விசுவரூபம் எடுத்துவரும் நிலையில் தந்தி டி.வி. சார்பில் கர்நாடக மாநில நீர்ப்பாசனத்துறை மந்திரி சிவக்குமாருடன் சிறப்பு நேர்காணல் நடத்தப்பட்டது.

கர்நாடக மந்திரியிடம் கேட்கப்பட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

வீணாக கடலுக்கு செல்கிறது

கேள்வி: கர்நாடகாவிற்கு மேகதாது அணை ஏன் தேவை?

பதில்: இது கர்நாடகாவுக்கு அல்ல. காவிரி இந்த நாட்டின் நதி. இந்த வருடம் கொடுக்க வேண்டிய 177 டி.எம்.சி.யை தாண்டி, கிட்டத்தட்ட 450 டி.எம்.சி. நீர் தமிழ்நாட்டிற்கு சென்றுள்ளது. நாங்களும் பயன்படுத்த முடியவில்லை, தமிழ்நாடும் பயன்படுத்த முடியவில்லை. வீணாக கடலுக்கு சென்றுள்ளது.

இந்த திட்டம் தமிழ்நாட்டிற்கு தான் அதிகம் உதவும். தமிழக விவசாயிகளை பாதுகாக்கவும், தமிழ்நாட்டிற்கு தண்ணீர் கொடுக்கவும், உச்சநீதிமன்ற தீர்ப்பை மதிக்கவும் தான் இந்த அணை கட்டப் படுகிறது.

தமிழகத்துக்காக செலவா?

கேள்வி: தமிழக விவசாயிகளுக்காக கர்நாடக அரசு ரூ.5,900 கோடி செலவு செய்கிறது என்று சொன்னால், மக்கள் ஏற்றுக்கொள்வார்களா?

பதில்: ஏன் கூடாது? கிட்டத்தட்ட ரூ.2,000 கோடி நாங்கள் மின்சாரம் தயாரிக்க பயன்படுத்துவோம். அது எங்களுக்கு பயன் தான். அதற்கு பிறகு கொஞ்சம் குடிநீர் தேவை... அதை எங்கிருந்து வேண்டுமானாலும் எடுக்கலாம்.

சட்ட திட்டங்களை மதிக்கிறோம்

கேள்வி: தமிழக விவசாயிகளுக்காக அணை கட்டித்தரும் அளவிற்கு கர்நாடக அரசிடம் கூடுதல் நிதி இருக்கிறதா?

பதில்: ஆமாம். நாங்கள் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை மதிக்க நினைக்கிறோம். சட்ட திட்டங்களை மதித்து நடக்கிறோம் எங்களுக்கு சண்டைபோட விருப்பமில்லை.

பேச்சுவார்த்தை ஏன்?

கேள்வி: கர்நாடக முதல்- மந்திரி இதை பற்றி விவாதிக்க தமிழகத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார். ஆனால் காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்தில் இதை விவாதிக்காமல், ஏன் இரண்டு மாநிலங்களும் தனியாக பேச வேண்டும்?

பதில்: இதற்கு காரணம் அரசியல் கட்சி தலைவர்கள் தான். பொறியாளர்கள் அல்ல. உங்கள் தலைவர்கள் இதை அரசியலாக்கிவிட்டனர். அதிகாரிகளுக்கு இது புரியும். அவர்களுக்கு உண்மைநிலை தெரியும். ஆனால் அரசியல் தலைவர்கள் அரசியல்ரீதியாக முடிவெடுக்க வேண்டும்.

எதிர்ப்பு

கேள்வி: தமிழகத்தில் இது தான் தொடர்ந்து நடக்கிறது என்று சொல்கிறீர்கள்..! ஆனால் தமிழக காங்கிரஸ் கட்சி கூட மேகதாதுவை எதிர்க்கிறதே?

பதில்: அது அவர்களின் கடமை. செய்யட்டும், அதை தடுக்க விரும்பவில்லை.

கேள்வி: அ.தி.மு.க., தி.மு.க. அரசியல் செய்கிறது என்கிறீர்கள். ஆனால் காங்கிரசும் செய்கிறதே?

பதில்: அந்த மாநிலத்தில் அவர்கள் போராடத்தான் வேண்டும். இங்கு பா.ஜ.க., காங்கிரஸ், ஜனதா தளம் அனைவரும் இணைந்து எங்கள் மாநிலத்தை பாதுகாக்க வேண்டும். அதில் எதுவும் தவறில்லை.

தலைமையின் நிலை...

கேள்வி: மேகதாது திட்டம் பற்றிய மத்திய காங்கிரஸ் தலைமையின் நிலைப்பாடு என்ன?

பதில்: இதில் யாரையும் தொடர்புபடுத்த விரும்பவில்லை. இது எங்கள் மாநில பிரச்சினை.

கேள்வி: 2019 தேர்தல் வரும்போது, மேகதாதுவில் மத்திய காங்கிரசின் நிலை பற்றி தெரிந்து கொள்ள தமிழக மக்கள் விரும்புவார்கள்... கர்நாடக மக்களும் விரும்புவார்கள்...?

பதில்: மத்திய காங்கிரஸ் தலைமை இந்த விவகாரத்தில் தலையிடாது. உங்கள் மாநில உரிமைக்கு நீங்கள் போராட வேண்டும், எங்கள் மாநிலத்திற்கு நாங்கள் போராடுவோம்.

இன்று ஒளிபரப்பு

இதுபோன்ற கர்நாடக மந்திரி சிவக்குமாரின் பரபரப்பான பதில்கள் அடங்கிய பேட்டியின் முழு தொகுப்பு இன்று (புதன்கிழமை) இரவு 9.30 மணிக்கு தந்தி தொலைக் காட்சியில் ஒளிபரப்பாகிறது. இதன் மறுஒளிபரப்பு நாளை (வியாழக்கிழமை) பிற்பகல் 2.30 மணிக்கு ஒளிபரப்பாகும்.

மேலும் செய்திகள்