அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும் இலவச கபசுர குடிநீர் ‘பாக்கெட்’ வழங்க கோரி வழக்கு

அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும் இலவச கபசுர குடிநீர் ‘பாக்கெட்’ வழங்க கோரி வழக்கு அரசு பரிசீலிக்க ஐகோர்ட்டு உத்தரவு.

Update: 2021-06-22 19:18 GMT
சென்னை,

சென்னை ஐகோர்ட்டில், அய்யா என்பவர் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில், ‘‘கொரோனா பாதிப்பை தடுக்கும் வகையில், உடலில் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் கபசுர குடிநீர் பாக்கெட்டுகளை தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும் இலவசமாக வழங்க அரசுக்கு உத்தரவிட வேண்டும். மத்திய ஆயுஷ் அமைச்சகம், கபசுர குடிநீர் வினியோகத்தை விரைவுபடுத்த அனைத்து மாநில அரசுகளுக்கும் உத்தரவிட்டு உள்ளது.

கொரோனா தொற்று பாதித்து பலியாவோரின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த மாநிலம் முழுவதும், பதிவு செய்யப்பட்ட சித்த மருத்துவர்களை கொண்டு சித்தா சிகிச்சை முகாம்களை நடத்த அரசுக்கு உத்தரவிட வேண்டும்’’ என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர், ‘மனுதாரரின் கோரிக்கை பல மாநில அரசின் கொள்கை முடிவுக்கு சம்பந்தப்பட்டது. இருந்தாலும், மனுதாரரின் கோரிக்கையை பரிசீலித்து தகுந்த உத்தரவை தமிழக அரசு பிறப்பிக்க வேண்டும்’ என்று உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தனர்.

மேலும் செய்திகள்