ஈரோடு: மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் நாதஸ்வர கலைஞர் அடித்து கொலை

ஈரோடு அருகே மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் நாதஸ்வர கலைஞர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2022-04-22 07:52 GMT
ஈரோடு:

ஈரோடு மாவட்டம், புஞ்சை புளியம்பட்டி அருகே உள்ள மாரம்பாளையம் காலனியை சேர்ந்தவர் பழனிசாமி (வயது 52) நாதஸ்வர கலைஞர். இவரது மனைவி பழனாள் (42). இவர்களுக்கு வேலுச்சாமி (26) என்ற மகனும் பத்மாவதி (23) என்ற மகளும் உள்ளனர்.

பழனிச்சாமிக்கு குடிப்பழக்கம் இருந்த நிலையில் நேற்று இரவு அவரது உறவினர்களான தவில் வாசிக்கும் சின்னமணி, ராமராஜன், ஆகியோரோடு சேர்ந்து தண்ணீர்பந்தலில் இருந்து மாரம் பாளையம் செல்லும் வழியில் கொலுஞ்சி காடு அருகே பாறையில் அமர்ந்து ஒன்றாக மது அருந்தியுள்ளனர்.

அப்போது அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் பழனிசாமியை, சின்னமணி மற்றும் ராமராஜன் ஆகியோர் கட்டையால் தாக்கியுள்ளனர். இதில் பழனிச்சாமி சம்பவ இடத்தில் உயிரிழந்தார்.

இந்நிலையில் இன்று காலை அவ்வழியே சென்றவர்கள் பழனிசாமி இறந்த நிலையில் கிடப்பதை கண்டு புஞ்சைபுளியம்பட்டி காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். அதன் பேரில் சத்தியமங்கலம் டிஎஸ்பி தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் ஈரோட்டில் இருந்து கைரேகை நிபுணர்கள் வந்து தடயங்களை சேகரித்தனர். 

பழனிச்சாமியின் பிரேதத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தப்பி ஓடிய கொலையாளிகளை போலீசார் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்