கணவன், மனைவியை மிரட்டி நகை-பணம் பறிப்பு; 4 பேருக்கு வலைவீச்சு

மோட்டார் சைக்கிளில் சென்ற கணவன், மனைவியை மிரட்டி நகை, பணம் பறிக்கப்பட்டது. இது தொடர்பாக 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

Update: 2023-10-14 08:49 GMT

காஞ்சீபுரம் மாவட்டம் உத்திரமேரூர் ஒன்றியம் சிறுதாமூர் கிராமத்தை சேர்ந்தவர் பிரகாஷ் (வயது 36). லாரி டிரைவர். இவரது மனைவி தீபா (35). இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். நேற்று முன்தினம் உறவினர் வீட்டு விசேஷத்திற்கு செங்கல்பட்டு அருகே உள்ள வடபாதி கிராமத்திற்கு சென்று விட்டு பின்னர் சிறுதாமூர் நோக்கி சென்று கொண்டிருந்தனர்.

சாலவாக்கம் அடுத்த பொற்பந்தல் கிராமம் அருகே இரவு 10 மணியளவில் சென்ற போது அவர்களுக்கு பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த 4 பேர் அவர்களை வழிமறித்து மிரட்டி தீபா அணிந்து இருந்த 5½ பவுன் நகைகளை மிரட்டி வாங்கினர். மேலும் பிரகாஷிடம் இருந்த ரூ.6 ஆயிரத்தையும் பறித்தனர்.

பின்னர் மோட்டார் சைக்கிளில் தப்பிச்சென்று விட்டனர். இது பற்றி தீபா சாலவாக்கம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

இன்ஸ்பெக்டர் பிரபாகரன் இது குறித்து வழக்குப்பதிவு செய்து வழிப்பறியில் ஈடுபட்ட 4 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்