பட்டப்பகலில் வீடு புகுந்து துணிகரம்: இளம்பெண்ணை கத்தியால் வெட்டி 17 பவுன் நகை, பணம் கொள்ளை

இளம்பெண்ணை கத்தியால் வெட்டி 17 பவுன் நகை, பணத்தை மர்ம நபர் கொள்ளையடித்து தப்பி சென்றார்.

Update: 2023-01-24 08:54 GMT

சோழவரம் ஒன்றியம், மல்லியங்குப்பம் ஊராட்சியை சேர்ந்த ஏரிக்கரை தெருவில் வசித்து வருபவர் உதயகுமார் (வயது 30). காய்கறி வியாபாரி.

இவருக்கு திருமணமாகி மாலதி (26) என்ற மனைவியும், தர்சிணி (8), ஹாருணி (6) என 2 மகள்கள் உள்ளனர். மகள்கள் பெரியபாளையத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் படித்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று காலை உதயகுமார் காய்கறி வியாபாரம் செய்ய வெளியே சென்று விட்டார். 2 குழந்தைகளும் பள்ளிக்கு சென்று விட்டனர். இதனால் மாலதி வீட்டில் தனியாக இருந்தார்.

இதனை அறிந்த மர்ம நபர் ஒருவர் முகத்தை மூடிய வண்ணம், ரெயின் கோட் அணிந்து கொண்டு வீட்டின் மாடிபடி வழியாக வீட்டின் உள்ளே வந்தார். பின்னர், தனியாக இருந்த மாலதியின் கழுத்தில் இருந்த தங்க சங்கிலி, கம்மல், மூக்குத்தி ஆகியவற்றை பறிக்க முயன்றார். ஆனால், மாலதி நகைகளை கொடுக்க மறுத்ததால் அந்த நபர் மாலதியை கத்தியால் வெட்டினார். ரத்தம் சொட்ட, சொட்ட மர்ம நபரிடம் போராடிய மாலதியிடம் இருந்து மூக்குத்தி உள்ளிட்ட நகைகளை இந்த மர்ம நபர் பிடுங்கினார்.

பின்னர், பீரோ சாவியை கேட்டுள்ளார். பீரோ சாவியை தர மறுத்து கதவை திறந்து வெளியே ஓடி வர மாலதி முயற்சித்தார். அப்பொழுது அந்த மர்ம நபர் மாலதியின் கால்களை கத்தியால் வெட்டினார். எனவே மாலதி என்னை காப்பாற்றுங்கள்! காப்பாற்றுங்கள்! என்று கூக்குரல் இட்டார். அதற்குள் மர்ம நபர் பீரோவை திறந்து அதிலிருந்து 17 பவுன் நகை மற்றும் ரொக்கப்பணம் ரூ.1½ லட்சம் ஆகியவற்றை கொள்ளையடித்துக் கொண்டு மாடிப்படி வழியாக ஏறி வெளியே சென்று விட்டார்.

பின்னர், வீட்டின் அருகே நிறுத்தி இருந்த மோட்டார் சைக்கிளில் ஏறி தப்பி சென்றார். சிறிது நேரத்தில் ரத்தம் சொட்ட, சொட்ட கதவை திறந்து கொண்டு வெளியே வந்த மாலதியின் கூக்குரல் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடி வந்தனர். பின்னர் மயங்கி விழுந்த மாலதியை உடனடியாக பொன்னேரி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்று அனுமதித்தனர்.

தகவல் அறிந்த ஆரணி போலீசார் மற்றும் ஊத்துக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு சாரதி சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். பட்டப்பகலில் நடைபெற்ற இந்த கொள்ளை சம்பவம் இந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்