அடுத்த மாதம் திருமணம்: பஸ்சுக்கு கீழே படுத்து உறங்கிய டிரைவர் தலைநசுங்கி சாவு - கோவையில் சோகம்

பஸ்சின் சக்கரத்தில் சிக்கிய கருப்பசாமி கண் இமைக்கும் நேரத்தில் தலை நசுங்கி உயிரிழந்தார்.

Update: 2024-05-10 02:22 GMT

கோவை,

கோவையை அடுத்த காளப்பட்டி காட்டூர் வீதியைச் சேர்ந்தவர் கருப்பசாமி (வயது 25). தனியார் பஸ் டிரைவர். இவர் நேற்றுமுன் தினம் காலை பேரூரில் இருந்து பீளமேடு பாலிடெக்னிக் வரை செல்லும் தனியார் பஸ்சை ஓட்டிச் சென்றார். அன்று இரவு 9.30 மணி அளவில் அவர் பேரூர்- சிறுவாணி ரோடு பச்சாபாளையம் அருகே தனியார் பெட்ரோல் விற்பனை நிலையத்துக்கு கொண்டு வந்து தனியார் பஸ்சை நிறுத்தினார். அங்கு மேலும் 2 தனியார் பஸ்கள் நிறுத்தப்பட்டு இருந்தன.

இரவு பஸ்சை நிறுத்தியதும் தனியார் பஸ்களின் டிரைவர் மற்றும் கண்டக்டர்கள் அங்கேயே படுத்து தூங்கி உள்ளனர். இதில் டிரைவர் கருப்பசாமி தான் ஓட்டி வந்த தனியார் பஸ்சின் கீழே பாய் விரித்து படுத்து தூங்கினார். நேற்று காலையில் டிரைவர் மற்றும் கண்டக்டர்கள் எழுந்தனர். அப்போது கருப்பசாமியையும் எழுப்பி விட்டதாக கூறப்படுகிறது. ஆனாலும் அவர் அசந்து தூங்கியதாக தெரிகிறது. இதற்கிடையே மற்ற தனியார் பஸ் டிரைவர், கண்டக்டர்கள் குளித்து தயாராகி பணிக்கு புறப்பட்டனர்.

அதில் காலை 6.10 மணிக்கு ஒரு தனியார் பஸ் அங்கிருந்து புறப்பட்டு சென்றது. இதையடுத்து கருப்பசாமி ஓட்டும் தனியார் பஸ்சை நேற்று ஓட்ட வேண்டிய மற்றொரு டிரைவர் சூர்யா அங்கு வந்தார். அப்போது கண்டக்டர் மகேஷ்குமார் தன்னிடம் இருந்த டிக்கெட்டுகளை சரி பார்த்துக் கொண்டு இருந்ததாக தெரிகிறது.

இதற்கிடையே டிரைவர் சூர்யா, பஸ்சுக்கு கீழே கருப்பசாமி படுத்து இருப்பதை கவனிக்காமல் பஸ்சை முன்னோக்கி இயக்கினார். அப்போது பஸ்சின் சக்கரத்தில் சிக்கிய கருப்பசாமி கண் இமைக்கும் நேரத்தில் தலை நசுங்கி ரத்த வெள்ளத்தில் பரிதாபமாகஉயிரிழந்தார். இது குறித்து பேரூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் அவர்கள், டிரைவர் சூர்யாவை பிடித்து போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

அடுத்த மாதம் (ஜூன்) திருமணம் நடைபெற இருந்த நிலையில் பஸ் சக்கரத்தில் சிக்கி டிரைவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்