காப்புக்காடுகள் அருகே குவாரி: தடையை தளர்த்திய அரசாணையை எதிர்த்த வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க ஐகோர்ட்டு உத்தரவு

காப்புக்காடுகள் அருகே குவாரி அமைக்க விதிக்கப்பட்டிருந்த தடையை தளர்த்திய அரசாணையை எதிர்த்த வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

Update: 2023-02-02 08:54 GMT

சென்னை,

தமிழ்நாட்டில் காப்புக்காடுகளுக்கு அருகே குவாரி அமைக்க விதிக்கப்பட்டிருந்த தடையை தளர்த்தி பிறப்பிக்கப்பட்ட அரசாணையை எதிர்த்த வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள தேசிய பூங்காக்கள், சரணாலயங்கள், காப்புக்காடுகள் அமைந்துள்ள பகுதிகளைச் சுற்றி ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்கு எந்த குவாரி நடவடிக்கைகளும் மேற்கொள்ளக் கூடாது என்று 2021-ம் ஆண்டு நவம்பர் மாதம் அரசாணை பிறப்பிக்கப்பட்டது. இந்த நிலையில், கடந்த 2022-ம் ஆண்டு டிசம்பர் மாதம் தமிழ்நாடு கனிமவள விதிகளில் திருத்தம் கொண்டு வரப்பட்டு, காப்புக் காடுகள் நீக்கப்பட்டு, அரசாணை பிறப்பிக்கப்பட்டது.

இந்த அரசாணையை எதிர்த்து மாற்றத்துக்கான இந்தியா என்ற அமைப்பின் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில், காப்புக்காடுகளைச் சுற்றி ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்கு குவாரி நடவடிக்கைகள் மேற்கொள்ள விதிக்கப்பட்ட தடையை நீக்கியுள்ளதன் மூலம், அப்பகுதிகளில் குவாரி நடவடிக்கைகள் தொடங்கப்படலாம். அது சுற்றுச்சூழலுக்கு மட்டுமின்றி வன விலங்குகளுக்கும் ஈடுகட்ட முடியாத பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் குவாரி உரிமையாளர்களின் அழுத்தத்துக்கு பணிந்து முந்தைய ஆண்டு பிறப்பித்த அரசாணை மீண்டும் திருத்தி புதிய அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது.

மேலும் எந்த நியாயமான காரணமும் இல்லாமல், காப்புக்காடுகளில் குவாரி நடவடிக்கைகளுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை தளர்த்திய இந்த அரசாணைக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் அந்த மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் வைத்தியநாதன் மற்றும் சத்திய நாராயண பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த மனுவுக்கு வருகிற மார்ச் 2-ம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை ஒத்திவைத்தனர்.Full View

Tags:    

மேலும் செய்திகள்