அரக்கோணத்தில் இருந்து சென்னைக்கு சரக்கு ஆட்டோவில் கடத்திய 4 டன் ரேஷன் அரிசி பறிமுதல் - 3 பேர் கைது

அரக்கோணத்தில் இருந்து சென்னைக்கு சரக்கு ஆட்டோவில் கடத்தப்பட்ட 4 டன் ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்து 3 பேரை கைது செய்தனர்.

Update: 2022-06-01 12:58 GMT

ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் பகுதியில், ரேஷன் அரிசியை வாங்கி திருவாலங்காடு வழியாக சென்னைக்கு கடத்தி வருவதாக திருவாலங்காடு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை தலைமையிலான போலீசார் நேற்று இரவு அரக்கோணம் திருவள்ளூர் செல்லும் சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக அதிவேகமாக வந்த சரக்கு ஆட்டோவை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் 4 டன் ரேஷன் அரிசி கடத்தி வந்தது தெரியவந்தது.

இதனையடுத்து ரேஷன் அரிசி கடத்திய சென்னை வியாசர்பாடி பகுதியை சேர்ந்த பேதராமன் (வயது 28), சரவணன் (வயது 33), மதன் (வயது 21) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். சரக்கு ஆட்டோவை பறிமுதல் செய்தனர்.

ரேஷன் அரிசியை திருவள்ளூர் குடிமை பொருள் வழங்கல் இன்ஸ்பெக்டர் சுந்தரம்மாளிடம் ஒப்படைத்தனர். இதுபற்றி குடிமை பொருள் அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றார்.

இதேபோல் கும்மிடிப்பூண்டியில் இருந்து ரெயில் மூலம் ஆந்திராவுக்கு ரேஷன் அரிசி கடத்துவதாக திருவள்ளுர் குடிமை பொருள் குற்றப்புலனாய்வு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து திருவள்ளூா் குடிமை பொருள் குற்றப்புலனாய்வு பிரிவு இன்ஸ்பெக்டர் சுந்தராம்பாள் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் நந்தினிஉஷா மற்றும் போலீசார் கும்மிடிப்பூண்டி ரெயில் நிலைய வளாகத்தில் சோதனை மேற்கொண்டனா்.

அப்போது ரெயில் நிலைய நடைமேடை 1-ல் போலீசார் சோதனை செய்தனா். அப்போது, கேட்பாரற்று கிடந்த 50 கிலோ எடை கொண்ட 22 மூட்டைகளில் ஒரு டன் ரேஷன் அரிசி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவற்றைப் பறிமுதல் செய்த போலீசார், திருவள்ளூா் நுகா்பொருள் வாணிப கிடங்கில் ஒப்படைத்தனா். மேலும், ரேஷன் அரிசியை கடத்திய மா்ம நபா்கள் குறித்து குடிமை பொருள் குற்றப்புலனாய்வு பிரிவு போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனா்.

Tags:    

மேலும் செய்திகள்