உலகம் முழுவதும் இடம்பெயர்ந்தோர் எண்ணிக்கை முதல் முறையாக 10 கோடியாக உயர்வு
உலகம் முழுவதும் போர் உள்ளிட்ட காரணங்களால் தங்கள் இருப்பிடங்களை விட்டு வெளியேறி இடம்பெயர்ந்தோர் எண்ணிக்கை 10 கோடியாக அதிகரித்துள்ளது.;
Image Courtesy: AFP
பெர்லின்,
உலகம் முழுவதும் போர், வன்முறை, மனித உரிமை மீறல்கள், பொருளாதாரம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக பல பகுதிகளில் மக்கள் தங்கள் நாடுகள் இருப்பிடங்களை விட்டு வெளியேறி வேறு இடத்திற்கு இடம்பெயர்ந்து வருகின்றனர்.
குறிப்பாக, சிரியா, ஏமன், ஈராக், எத்தியோப்பியா, பர்கினோ பாசோ, மியான்மர், நைஜீரியா, ஆப்கானிஸ்தான், காங்கோ குடியரசு உள்ளிட்ட நாடுகளில் உள்நாட்டு போர் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் அந்நாடுகளில் இருந்து மக்கள் அகதிகளாக வேறு நாடுகளுக்கும் இடம்பெயர்ந்து வருகின்றனர்.
தற்போது, உக்ரைன் - ரஷியா இடையே போர் நடைபெற்று வருவதால் உக்ரைனில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் அகதிகளாக தங்கள் நாட்டை விட்டு வெளியேறி வேறு நாடுகளுக்கு இடம்பெயர்ந்து வருகின்றனர்.
இந்நிலையில், உலகம் முழுவதும் இதுவரை 10 கோடிக்கும் அதிகமானோர் தாங்கள் வாழ்ந்து வந்த பகுதியில் இருந்து போர் உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக இடம்பெயர்ந்துள்ளதாக ஐநா அகதிகளுக்கான அமைப்பு தெரிவித்துள்ளது. அகதிகளாக இடம்பெயர்ந்தோர் எண்ணிக்கை 10 கோடியை தாண்டியது இதுவே முதல்முறை என அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.